கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி முறையாக பதிவு செய்யப்படவில்லை.. குழந்தைகள் நல ஆணையர் பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 17 வயது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த தனியார் பள்ளியின் விடுதி முறையாக பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்ததாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
இதில் பள்ளியின் பேருந்து, வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் கொளுத்தப்பட்டன.

278 பேர் கைது
இந்த கலவரம் தொடர்பாக 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வதந்தி பரப்பாதீர்
மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எந்தவித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி இறப்பு தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கியது.

3 மணி நேரம் விசாரணை
ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையில் உறுப்பினர்கள் நேரில் சென்றனர். சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் மாணவி இறந்ததை அடுத்து, அந்த பள்ளிக்கு நான், எனது குழுவினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் சென்றோம்.

24 பெண் குழந்தைகள்
அங்கு 3 மணி நேரம் ஆய்வு நடத்தி விசாரணையும் நடத்தினோம். அப்போது அந்த பள்ளி விடுதி முறையாக பதிவு செய்யப்படாமல் இயங்கியது தெரியவந்தது. இந்த அனுமதியின்றி செயல்பட்ட பள்ளி விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எந்த வழக்கிலும் குழந்தைகளின் பெயர்களையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக் கூடாது. வரும் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. அப்போது அவர்களுடன் நாங்களும் வருவோம் என்றார் சரஸ்வதி.












Click it and Unblock the Notifications