காங்கிரஸ் வராவிட்டால் என்ன.. சத்தமே இல்லாமல் கமல் ஸ்கெட்ச்.. உருவாகும் புது கூட்டணி
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அந்த கட்சி கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு வரவில்லை. இதேபோல் தம்பி திருமா என அழைத்தும் அவரும் கமலின் கூட்டணிக்கு வரவில்லை.
ஆனாலும் அசராத கமல்ஹாசன், பல்வேறு சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சரத்குமார், பச்சமுத்து ஆகியோரை தங்கள் கூட்டணியில் இணைத்த கமல்ஹாசன், தற்போதைய நிலையில் கருணாஸின் புலிப்படை மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கட்சிகள் தீவிரம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 30 நாள்கள் மட்டுமே காலஅவகாசம் உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரம் மட்டுமே காலஅவகாசம் உள்ளது. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள மூன்று அணிகளான அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை தீவிரம் காட்டுகின்றன.
குறைவான தொகுதிகள்
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இந்த முறை வழக்கத்தைவிட குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படுகிறது. இதனால் விசிக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வருத்தத்தை வெளிப்படுத்தின. எனினும் யாரும் கூட்டணியி விட்டு விலகி செல்லவில்லை. பாஜகவையும் அதிமுகவையும் தோற்கடிக்க திமுகவுடன் இருக்க வேண்டும் என்பதில் தங்கள் உறுதியை வெளிப்படுத்தி உள்ளனர். தொகுதி உடன்பாட்டை விட கூட்டணி முக்கியம் என விரும்புகின்றன.
காங்கிரஸ்க்கு அழைப்பு
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தம்பி திருமா என்று பாசத்தோடு அழைத்தார். ஆனால் அவர் கூட்டணிக்கு வரமுடியாது என்பதை நாசுக்காக மறுத்துவிட்டார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவே கமல் கூட்டணிக்கு நேற்று அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்கவில்லை. 25 தொகுதிகளை வாங்கி கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்தது.
காங்கிரஸ் வரவில்லை
காங்கிரஸ் வராத நிலையில், அசராத கமல்ஹாசன், மற்றசிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலையில் கமலின் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. இது தவிர கருணாஸின் புலிப்படை மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கமல் டிடிவி இணைவார்களா
இதுதவிர டிடிவி தினகரனின் அமமுக கமல் கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. கமல்ஹாசன் அணி இந்த முறை எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஓட்டை பிரிப்பாரா அல்லது ஆட்சியை பிடிப்பாரா என்பது மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.