திருமாவளவன் கழுத்தை பாருங்க.. பிறந்தநாள் பரிசாக கமல்ஹாசன் வழங்கிய ஒரு கிலோ செயின்.. தங்கமா?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன், திருமாவளவன் கழுத்தில் அணிவித்த தங்க செயின் தற்போது கவனம் பெற்றுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாவளவன். இவர் சிதம்பர் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருக்கிறார். திருமாவளவனுக்கு இன்று பிறந்தநாள். திருமாவளவன் பிறந்த நாளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்து. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது விழா மேடையில் திருமாவளவனுக்கு, கமல்ஹாசன் பிறந்தநாள் பரிசு வழங்கினார். தடிமனான சங்கிலியை கமல்ஹாசன், திருமாவளவன் கழுத்தில் அணிவித்தார். அது தங்க முலாம் பூசப்பபட்ட வெள்ளி செயின் ஆகும். அதன் எடை ஒரு கிலோவாகும். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் செயல்பட்டு வருகிறது. திருமாவளவன் பிறந்தநாள் கமல்ஹாசன் பேசும்போது, ‛‛என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். சாதி தான் எனது முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் நான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. நம்மை விட யாரும் உயர்ந்தவரும் இல்லை என்பதை உங்களின் மனதில் பதிய வைப்பது தான் இமாலய சாதனை.
பெண்களின் முன்னேற்றத்தை வைத்து தான் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். நாங்கள் மக்கள் நீதி மய்யத்தில் பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். அந்த ஐடியா இங்கிருந்து தான் வந்தது. அதனை செயல்படுத்தினார் என் சகோதரன். எனக்கு கட்சிக்கும் கிடையாது. எல்லா கட்சியும் என் கட்சி என்று நினைத்தால் அதுதான் இந்தியா.
திருமாவளவனின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு சாதாரணமானது கிடையாது. அதில் பல தழும்புகள் இருக்கின்றன. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும்.
ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அரசியலில், அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா என கேட்டால் திருமாவளவன் அரசியலைத் தான் தேர்ந்தெடுக்கிறார். அவரைக் கண்டு நான் வியக்கிறேன். கட்சி ஆரம்பித்து நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது அதை ஆரம்பித்த எனக்கு தெரியும்'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications