“முதலமைச்சருக்கு பெயர் சூட்டியவர்தான் இளையராஜாவுக்கும், எனக்கும் பெயர் சூட்டினார்” -கமல்ஹாசன்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் ஆற்றிய சிறப்புரை கவனம் பெற்றிருக்கிறது.
கமல்ஹாசன் பேசியதாவது, "உயிரே உறவே தமிழே வணக்கம்! தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி அவர்களே, ரஜினிகாந்த் அவர்களே, மூத்த அமைச்சர்களே மொத்தமாக சுருக்கமாக எல்லாரையும் வரவேற்க வேண்டும் என்றால் அரங்கத்திலும் மேடையிலும் வீற்றிருக்கும் இளையராஜா ரசிகர்களே அனைவருக்கும் உங்களில் ஒருவனான நான் வரவேற்கிறேன்.

இது வரவேற்புரை அல்ல இருந்தாலும் எல்லோரையும் மறுபடி மறுபடி வரவேற்க வேண்டும்போல் தோன்றுகிறது. நாம் இசையில் நனைந்ததை போல, நமது மண்ணையும் இசை நனைந்திருக்கிறது. அதிக பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. அண்ணா இளையராஜா அவர்களுடன் நான் கடந்து வந்த இந்த 50 வருட நிலையை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால் இந்த விழா நேரம் போதாது. அதனால் அவருக்காக நான் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.
நல்லவேளை இசை கலைஞர்கள் எல்லாம் போயிட்டாங்க. அதனால ஸ்ருதி சேரலான மன்னிச்சுக்கோங்க. இந்த விழாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பெயர் வைத்த அதே மாமனிதர்தான், என் அண்ணன் இளையராஜா அவர்களுக்கும், எனக்கும் பெயர் சூட்டினார்கள். இந்த விழாவில் நாம் பேசுவது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பது என் அண்ணனுக்கு தெரியும். இந்த இசைஞானிதான் என் அண்ணன்" என்று கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பாட்டாக பாடி, இளையராஜாவை மெய்மறக்க செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன். பள்ளியில் சேரும்போது அவருடைய தந்தை அவருடைய பெயரை ராஜையா என்று மாற்றினார். இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர், அவரை ராஜா என்று அழைத்தார். திரைப்பட தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலம், அவரது முதல் படமான "அன்னக்கிளி" படத்திற்காக, "இளைய" என்ற முன்னொட்டைச் சேர்த்து "இளையராஜா" என்று பெயர் சூட்டினார். ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் ஏ.எம்.ராஜா என்ற மற்றொரு பிரபல இசையமைப்பாளர் இருந்தார், அதனால் குழப்பத்தைத் தவிர்க்க இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்படியாக ஞானதேசிகன், இளையராஜாவாக மாறினார். ஆனால் இவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. இசைஞானி என்பதுதான் அது. அதை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் சூட்டினார். அதேபோல, கமல்ஹாசனுக்கு கலைச்சுடர் என்கிற பெயரையும் சூட்டினார். இதை்தான் கமல்ஹாசன் இன்றைய மேடையில் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications