அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, கமலின் விமர்சனம் அவரது அறியாமையை காட்டுகிறது என்றார்.
நீண்டகாலமாகவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டார். கமல்ஹாசனின் தொடர் விமர்சனங்களுக்கு தக்க பதில் தரப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, கிராமசபை என்கின்ற ஒன்றை நான் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்களாக இருந்த மக்களுக்கான அதிகாரத்தை நான் தூசி தட்டி எடுத்தேன் என்று கூறிய கமல்ஹாசன் இது வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் அது குறித்து எதுவுமே பேசவில்லை என்று மு க ஸ்டாலின் குறித்து மறைமுகமாக சாடினார்.
மேலும், நான் சட்டமன்றத்தில் கூட சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன், அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டு தான் வருவேன் என்று கிண்டலாக பதிலளித்தார்.இதுகுறித்து புதுச்சேரியில் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போது, நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன் என்று சிரிப்பாக பதிலளித்தார். இந்தநிலையில், கமல்ஹாசனின் தொடர் விமர்சனங்களுக்கு தக்க பதில் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.