மின் கட்டணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை... அமைச்சர் குற்றச்சாட்டுக்கு கனிமொழி பதில்
சென்னை: திமுகவுக்கு மின் கட்டணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை வைத்து மக்களிடம் திமுக பீதியை கிளப்புவதாக அமைச்சர் உதயகுமார் குற்றஞ்சாட்டிய நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி எம்.பி.
மேலும், கொரோனா காலத்தில் கூட பணமே குறிக்கோளாக அரசு செயல்படக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக போராட்டம்... கறுப்புச் சட்டை அணிந்து ஸ்டாலின் கண்டன முழக்கம்
அமைச்சர் விமர்சனம்
மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரீடிங் எடுத்ததில் நிகழ்த்திய குளறுபடியே காரணம் எனக் கூறி தமிழகம் தழுவிய அளவில் திமுக போராட்டம் நடத்தியது. இந்நிலையில் இந்தப் போராட்டம் மக்களிடம் பீதியை கிளப்புவதற்காக நடத்தப்படும் போராட்டம் என்றும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உரிய விளக்கம் அளித்த பின்னரும் திமுக போராட்டம் நடத்துவது வீண் வேலை எனவும் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக போராட்டம் தொடங்கவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியிருந்தார்.
அவசியம் இல்லை
இந்நிலையில் சி.ஐ.டி.காலனி இல்லம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பிய கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, திமுகவுக்கு மின் கட்டணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படாத குடும்பமே தமிழகத்தில் இல்லை எனவும் தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சியான திமுகவின் கடமை என அமைச்சர் உதயகுமாருக்கு பதில் அளித்தார்.
குழப்பங்கள்
மின் வாரிய அதிகாரிகளும், தமிழக அரசும் ரீடிங் என்ற பெயரில் குளறுபடியையும், குழப்பத்தையும் நிகழ்த்திவிட்டு திமுக மீது குறை சொல்வதாக சாடினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கே நிதி இல்லாத சூழலில் ரூ.1000 கோடி அளவிற்கான நெடுஞ்சாலை டெண்டருக்கு இப்போது என்ன அவசியம் வந்தது என முதலமைச்சருக்கு கனிமொழி கேள்வி எழுப்பினார். மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
செவிமடுப்பதில்லை
கொரோனா பேரிடர் காலத்தில் கூட மின் கட்டணத்தில் சலுகை வழங்காமல் அரசு பிடிவாதம் பிடிப்பதாக சாடிய கனிமொழி, யாருடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவிமடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை தந்துள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.