டெல்லியில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்! கொதிப்புடன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய கனிமொழி!
ஏபிவிபி அமைப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கடிதம்.
சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில் ஜனநாயகக் குரல்களை நசுக்கும் வகையில் ஏபிவிபி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எழுதிய கடிதம் விவரம் வருமாறி;

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் வன்முறையில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சீர்குலைத்து தாக்குதல்
ஜேஎன்யுவில் உள்ள மாணவர் சங்க அலுவலகத்தில் Hundred Flowers குழுவால் திரைப்படக் காட்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஏபிவிபி சீர்குலைத்ததுடன், தமிழ் பிஎச்டி மாணவர்களைத் தாக்கவும் செய்தது. தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவப்படங்களையும் ஏபிவிபி அமைப்பினர் சேதப்படுத்தியுள்ளனர்.

வன்முறை அராஜகம்
இதனிடையே ஆம்புலன்சிலும் கூட ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியதில் சில மாணவர்களுக்கு ரத்தம் கொட்டியது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் தமிழ்நேசருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஏபிவிபியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறை அராஜகத்தை பாதுகாவலர்களும் டெல்லி போலீசாரும் வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுத்திடுக
ஜனநாயகக் குரல்களை நசுக்கும் வகையில் ஏபிவிபி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஜேஎன்யு போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏபிவிபியால் இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறர்.












Click it and Unblock the Notifications