அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக அறிக்கை... மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் கராத்தே தியாகராஜன்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்ற புதிய பதவியை எந்த விதியின் கீழ் உருவாக்கினார் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கராத்தே தியாகராஜன்.
அந்த அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளதோடு விமர்சிக்கவும் செய்துள்ளார்.
ஏழாம் பொருத்தம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலம் முதல் தற்போது வரை கராத்தே தியாகராஜனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. காங்கிரஸில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் எனக் கருதும் கராத்தே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிக்கைள், பேட்டிகள் வாயிலாக அவரை சீண்டி வருகிறார். அந்த வகையில் தற்போது மாநகராட்சி பொறியாளர் இடமாற்றம் விவகாரத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கைக்கு வாலன்ட்ரியாக வந்து பதில் அளித்துள்ளார் கராத்தே தியாகராஜன்.
திமுக -அமைச்சர்
சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் புகழேந்தியை நகராட்சி ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எப்படி நியமித்தார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு தயாரா எனவும் சவால் விட்டிருந்தார். அதற்கு அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கே.என்.நேரு மிக காட்டமான அறிக்கை வெளியிட்டு அதில் அமைச்சர் வேலுமணியை கடுமையாக சாடியிருந்தார்.
எந்த விதியின் கீழ்?
இந்நிலையில் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கும் கராத்தே தியாகராஜன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்ற புதிய பதவியை உருவாக்கி அவருடைய நண்பர் ராஜாசங்கரை நியமித்தார். இந்த நியமனத்திற்கு எந்த அரசாணையும் கிடையாது, மன்றத்தின் ஒப்புதலும் கிடையாது. இந்த பதவியை அவர் எப்படி வழங்கினார். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம்'' என வினவியுள்ளார்.
பலமுறை பதில்
மு.க.ஸ்டாலினை விமர்சித்து கராத்தே தியாகராஜன் அறிக்கை வெளியிடுவது புதிதல்ல, ஏற்கனவே பலமுறை ஸ்டாலினை சாடி, விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது ரஜினியின் ஆதரவாளர், ஆலோசகர் என்ற நிலையில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.