மேகதாது விவகாரம்.. தமிழக அரசுக்கு போட்டியாக.. பிரதமர் மோடியை சந்திக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று சந்திக்கவுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த அணையை மட்டும் கர்நாடக அரசு கட்டினால் டெல்டா பகுதியில் உள்ள லட்சக் கணக்கான மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

அனைத்துக் கட்சி கூட்டம்
தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதியின்றி மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி பிரதிநிதிகள்
மேலும் மத்திய அரசு இதற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாகக் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரைத் தமிழ்நாடு அனைத்து கட்சி பிரதிநிதிகள் நேரில் சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

எடியூரப்பா
அதன்படி தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினர் வெள்ளிக்கிழமை நீர்ப்பாசனத்துறை அமைச்சரைச் சந்திக்கின்றனர். இதற்காகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்குப் போட்டியாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளார்.

பிரதமர் மோடி
இந்த சந்திப்பில் மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை எடியூரப்பா பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மத்திய அமைச்சரைச் சந்திக்க டெல்லி சென்றுள்ள நிலையில், எடியூரப்பாவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications