மாநிலத் தலைவர் பதவி இலக்கு... தமிழகத்தை சுற்றி சுற்றி வரும் கார்த்தி சிதம்பரம்
சென்னை: கொரோனா பரபரப்புக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்கள் வட்டத்தை வலிமைப்படுத்தி வருகிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை குறி வைத்துள்ள இவர், அதற்கான காய் நகர்த்தலை இப்போதே தொடங்கிவிட்டார்.
சிவகங்கை மட்டுமல்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பழனி, மதுரை, என பல இடங்களுக்கும் சென்று கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
பெங்களூரில்.. சத்தம் போடாமல் கிடுகிடுவென உயரும் கொரோனா பலி.. ஜூலையில் மட்டும் 860 பேர்!
போராடி பெற்ற சீட்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் சீட் பெற்ற கதை ஊரறிந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடகடவென அறிவித்த ராகுல் சிவகங்கை தொகுதியை மட்டும் கிடப்பில் வைத்தார். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்திற்கு ராகுல் சீட் மறுத்ததற்கு ப.சிதம்பரம் மீது அவருக்கு உள்ள கோபம் தான் காரணம் என பெரியளவில் விவாதிக்கப்பட்டது. இதனிடையே ஒருவழியாக போராடி சீட் பெற்று தற்போது சிவகங்கை எம்.பி.யாக உள்ளார்.
தொகுதி அத்துபடி
சிவகங்கை மக்களவை தொகுதியை பொறுத்தவரை கார்த்தி சிதம்பரத்திற்கு பட்டித்தொட்டி எங்கும் அத்துப்படி. காரணம் இவரது தந்தை இந்த தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்ததால் அவர் சார்பில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடிமட்ட அளவில் ஆதரவாளர்களை வட்டத்தை ஏற்கனவே அங்கு வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரும் சிவகங்கை தொகுதி எம்.பியாகிவிட்டதால் மாதம் இரு முறையாவது தொகுதியை வலம் வருகிறார்.
கார்த்தி அதிருப்தி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி ப.சிதம்பரத்தின் ஆதரவு வட்டத்தை சேர்ந்தவர். இருப்பினும் அவரது நடவடிக்கைகள் ப.சி.க்கு திருப்தி தரும் வகையில் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது அதனைக் கண்டித்து வீரியமான முறையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் கே.எஸ்.அழகிரி மேற்கொள்ளவில்லை என்பது கார்த்தி சிதம்பரத்தின் வருத்தமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்ட போது அங்கு இருந்து எழுச்சியும், போராட்டமும் தமிழகத்தில் இல்லை என்பது கார்த்தியின் மன வருத்தத்திற்கு முக்கிய காரணம்.
சுற்றுப்பயணம்
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீங்கள் வர வேண்டும் என கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவரை வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை ஆரவாரமின்றி தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து ஆதரவை பெருக்குவது, குறிப்பாக இளைஞர்கள், மகளிர்களை அதிகம் கட்சியில் இணைப்பது என திட்டம் வகுத்து வருகிறார் கார்த்தி சிதம்பரம். ஏனெனில் ஒரு போராட்டம் என்றால் இளைஞர்களும், மகளிர்களும் தான் எதிர்பார்ப்பின்றி முதல் ஆளாக களத்திற்கு வருவார்கள் என்பது கார்த்தியின் நம்பிக்கை.