கார்த்தி சிதம்பரம் Vs எச். ராஜா.. சிவகங்கை சீமை யார் வசமாகும் ... கடும் போட்டியில் காங், பாஜக
Recommended Video

சென்னை: இந்த முறை சிவகங்கை தொகுதியில் மத்தியில் ஆளும் இரண்டு தேசிய கட்சிகளுமே களமிறங்கி உள்ளதால், ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்று மக்களை திசை திருப்பி வருகிறது.
அதில் காங்கிரஸ் தரப்பில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் இந்த தொகுதியில் மட்டும் அறிவிக்க முடியாத அளவுக்கு கோஷ்டி பூசல்!
ஊழல் வழக்கின் பின்னணியில் உள்ளவர்க்கு சீட் தரக்கூடாது என்று லோக்கல் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்த... கடைசியில் இந்த விஷயத்தில் கட்சி தலைமை தலையிட்டு சமாதானம் செய்த நிலைமை ஏற்பட்டு.. அதன்பிறகுதான் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

உள்ளடி வேலை
கார்த்திக்கு தொகுதியில் செல்வாக்குதான்... சாதி பலம் ஓரளவுதான் வெற்றிகரமாக இருக்கும். செட்டியார் சமூக ஓட்டுக்கள் குறிப்பிட்ட அளவு இருந்தாலும், அதையே முழுசாக நம்பி களம் இறங்க முடியாது. இதுபோக சிபிஐ கேஸ் சம்பந்தப்பட்ட தாக்கம் இக்குடும்பத்தினர் மீது உள்ளது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக, மகன் வெற்றிக்காக முழு நேர பிரச்சாரத்தில் ப.சிதம்பரம் ஈடுபட்டு வருகிறார். இதுபோக காங்கிரஸ் தரப்பிலேயே உள்ளடி வேலை நடந்தாலும் ஆச்சயரிப்பட ஒன்றுமே இல்லை.

நெருக்கடி
அதேபோல, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா களம் இறங்குகிறார். சொந்த ஊர் என்பதால் இதே சிவகங்கைதான் வேண்டும் என்று நச்சரித்து வந்தார். ஆனால் இங்கு அதிமுகதான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாம். எச்.ராஜா செய்த நெருக்கடியால் பாஜக வசம் ஒப்படைக்க அதிமுக வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டதாம். எச். ராஜா இங்கு போட்டியிட்டாலும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு குறைவுதான்.

அதிருப்தி
இதை தவிர இந்த தொகுதியில் கட்சியில் வேலை பார்க்க ஆள் கிடையாது. அதனால் அதிமுகவை முழுக்க முழுக்க நம்பிதான் எச்.ராஜா இறங்கி உள்ளார். ஆனால் சிக்கல் என்னவென்றால், ஈஸியாக ஜெயிக்க கூடிய தொகுதியை தூக்கி இப்படி எச்.ராஜாவுக்கு தந்துவிட்டீர்களே என்று அதிமுக தொண்டர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். இதனால் பாஜக வெற்றி பெற வேலை பார்ப்பது சுணக்கமாகி வருவதாக சொல்கிறார்கள்.

பாண்டி
காங்கிரஸ், பாஜகவுக்கு நடுவில் அமமுக வேட்பாளர் பாண்டி என்பவர் தொகுதிக்குள் வேக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் பெரும்பான்மையான ஓட்டுக்கள் இவருக்கு விழும் நிலைமை உள்ளது. என்ன கட்சி என்று பார்க்காமல் வெறும் சாதி ரீதியாக இந்த வேட்பாளரை பார்த்தால், காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதாவது 2வது இடத்துக்கு கண்டிப்பாக பாண்டி வருவார் என்று சொல்கிறார்கள்.
எப்படியோ இரு பெரும் தேசிய கட்சிகளில் எந்த கட்சி சிவகங்கையை தக்க வைக்க போகிறது என்பதை பார்ப்போம்!











Click it and Unblock the Notifications