பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் PFI அமைப்போடு தொடர்புடையவர்.. எச்.ராஜா பரபரப்பு ட்வீட்!
சென்னை: ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத் PFI அமைப்போடு தொடர்புடையவர் என்பது பிரச்சனையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, போலீசார் கருக்கா வினோத்திடம் மேற்கொண்ட விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததாலும், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பை கேட்டால் முதலமைச்சர் அதை தருவார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குண்டு வீசியவர் மனநோயாளியா, சமூகவிரோதியா என்பது விசாரணையில் தெரியும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வரும் வழக்கில் பி.எஃப்.ஐ அமைப்பின் நிர்வாகிகள் ஜாமீனில் வெளியே வந்தபோது, ரௌடி கருக்கா வினோத்தும் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. இது இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் இதுதொடர்பாக எச்.ராஜா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத் PFI யோடு தொடர்புடையவர் என்பது பிரச்சனையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. ஆனால் சட்ட அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு மேலும் கவலையளிக்கிறது. திமுக அமைச்சர்கள், தலைவர்கள் ஆளுநர் மீது நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் காரணமா? என சிந்திக்க வேண்டியுள்ளது.
PFI கூட்டாளியை மன நோயாளி என்று சட்ட அமைச்சர் கூறியுள்ளது மாநில அரசின் அசட்டையை காட்டுகிறது. நேற்று சென்னை இணை ஆணையர் பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை என பத்திரிகையாளர்களிடையே கூறினார். ஆனால் இன்று FIRல் குண்டு வெடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்பு குறித்து மாநில அரசை நம்ப முடியாது என்பது தெளிவு." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications