மக்கள் தேர்ந்தெடுத்த முதல் மேயர் நான்! என் கன்னிப்பேச்சில் கலைஞர் செய்த 2 திருத்தம் - மு.க.ஸ்டாலின்
சென்னை: மேயராக 1996 ஆம் ஆண்டு தான் பதவியேற்று முதல் கன்னிப்பேச்சை தயாரித்தபோது அதில் கருணாநிதி 2 திருத்தங்களை செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தல் வரலாறு
அவர் பேசுகையில், "இந்திய அரசமைப்பின் 74 வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் முதல் உள்ளாட்சித் தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் உரிய கால இடைவெளியில் தேர்தல்கள் நடைபெற்றன. 2016 ஆம் ஆண்டும் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை.

முறைகேடு இல்லாத தேர்தல்
இப்போது உள்ளாட்சித் தேர்தல் எந்த முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் நடந்து முடிந்திருக்கிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். உங்களின் சிறப்பான செயல்பாடுகள் தமிழ்நாடு மக்களுக்கு பயன்பட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறேன். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் பலர் இளம் வயதினர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உங்களின் கைகளில் உள்ளாட்சியின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. இதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்
நான் 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரே நான்தான். அன்று மேயரின் பதவிக்காலம் ஒரு ஆண்டுதான். அதில் பாராட்டு விழாவுக்கே 3 மாதங்கள் கடந்துவிடும். சங்கங்கள் வரவேற்பு தரும் நிகழ்ச்சிகளுக்கு 3 மாதங்கள் ஓடிவிடும். பின்னர் வெளிமாநிலங்கள், வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கே 6 மாதங்கள் கழிந்துவிடும். ஒரு பெரிய செவர்லட் கார், ஒரு அங்கி, பவுன் செயின், ஒரு செங்கோல் ஆகியவை தருவார்கள். இப்படியே பதவிக்காலம் முடிந்துவிடும்.

கருணாநிதி செய்த 2 திருத்தங்கள்
நான் 1996 ஆம் ஆண்டு மேயராக பதவியேற்ற பின்னர் இந்த நிலையை மாற்றினேன். மக்களோடு மக்களாக இருந்தால்தான் நமக்கு பெருமை. நமது இயக்கத்துக்கு சிறப்பு. நான் அப்போது மாநகராட்சிக் கூட்டத்தில் என் முதல் கன்னிப்பேச்சை தயாரித்து கலைஞரிடம் காட்டினேன். அவர் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லி 2 திருத்தங்களை செய்தார். மேயர் பதவி என்பதை அடித்துவிட்டு பொறுப்பு என்று மாற்றினார்.

கருணாநிதியின் ஆலோசனையை சொன்ன ஸ்டாலின்
உனக்கு மக்கள் கொடுத்திருப்பது மேயர் பதவியல்ல.. மேயர் பொறுப்பு. பொறுப்போடு பணியாற்றினால்தான் அது மக்களுக்குபோய் சேரும் என்று எடுத்துச் சொன்னார். அதையே நான் உங்களுக்கும் சொல்கிறேன். எனவே இதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்தீர்கள் என்றால் பொறுப்பாக பணியாற்ற முடியும்." என்றார்.












Click it and Unblock the Notifications