''எனது தொண்டை கெட்டிருந்தாலும் ஆற்ற வேண்டிய தொண்டை நிறுத்தமாட்டேன்''! கருணாநிதியின் ஸ்லேடை பேச்சு!
சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை மறுநாள் தொடங்கும் நிலையில் அதனை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளது திமுக.
இந்நிலையில் கருணாநிதி கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றியதிலிருந்து சில மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

''என் தொண்டை எவ்வளவு கெட்டிருக்கிறது என்பதை நான் பேசுவதிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். என்ன தான் தொண்டை கெட்டிருந்தாலும், ஆற்ற வேண்டிய தொண்டை நிறுத்துவதில்லை.
யார் யாரோ என்னென்னவோ கதை யெல்லாம் கட்டினார்கள். யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஏன் என்றால், நான் இருந்து இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பேன். நான் இருந்து, ஏற்கனவே பெற்ற வெற்றிகளைப் போல, பல மடங்கு வெற்றிகளை, இந்த இயக்கத்திற்குப் பெற்றுத் தருவேன் என்ற உறுதியை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
நாங்கள் இந்த இயக்கத்திலே ஒரு ஐம்பதாண்டு காலம், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஏறத்தாழ நான் என்னுடைய பன்னிரண்டாவது வயதிலே அல்லது பதிமூன்றாவது வயதிலே, இந்த இயக்கத்திலே இருந்த தொண்டர்களோடு, தோழர்களோடு, தலைவர்களோடு தொடர்பு கொண்ட அந்தக் காலத்திலிருந்து ஏறத்தாழ ஐம்பதாண்டு காலம் இந்த இயக்கத்திலே நான் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.
நான் எந்த வயதானாலும், எந்த ஒரு இலட்சியத்தை தமிழகத்திலே ஈடேற்ற வேண்டும் என்று கருதினேனோ, அந்த லட்சியத்தை, அந்த மாபெரும் வெற்றியை இந்த இயக்கத்திற்கு தேடித் தந்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன். நான் கஷ்டபப்படுவது நம்முடைய தம்பிமார்களுக்கு பொறுக்கவில்லை. இப்படி கஷ்டப்பட்டு பேசுகிறாரே, என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுகிற எண்ணம் தூய்மையானது எனக்குத் தெரியும். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு , உங்களுக்காக உழைப்பேன்.
என்னுடைய உற்றார் உறவினர். நண்பர்கள், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்துச் சொன்னாலும்கூட, நான் ஓய்வு பெற மாட்டேன் .
நான் மறந்தும் ஓய்வெடுத்துக்கொள்வேன் என்று சொல்ல மாட்டேன். எப்போதும் நான் உங்களுக்கு வேலைக்காரன்.
எப்போதும் நான் உங்களுக்காக பாடுபடக்கூடியவன். இந்த இயக்கத்தை திருவாரூரிலிருந்து திருக்குவளை என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தமிழ்க்கொடி காட்டி ஆரம்பித்தபோது, எந்த வலுவான, எந்த உறுதியான நிலை என் நெஞ்சிலே இருந்ததோ அதே உணர்ச்சியோடுதான் இந்த 93 -வது வயதிலும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி - 93 வயது ஆகி விட்டதே என்று நீங்கள் யாரும் பெருமூச்சு விட வேண்டாம். உங்களுடைய அன்புக்கு, உங்களுடைய பாசத்துக்கு என்றைக்கும் கட்டுப்பட்டவன் நான்.''












Click it and Unblock the Notifications