எடப்பாடி பழனிசாமியை விடுங்க.. வன்னியர் இடஒதுக்கீட்டில் திமுக "இதை" செய்யாம இருக்கணும்.. கருணாஸ் நச்
திமுக அரசுக்கு கருணாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்
சென்னை: "எல்லா சமுதாய மக்களுக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக இந்த அரசு 10.5 இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாது.. குறிப்பிட்ட சமுதாயத்திற்கான ஒரு அரசாக இந்த அரசு மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது" என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தை டாக்டர் ராமதாஸ், கடந்த டிசம்பர் மாதம் கிளப்பியபோதே, பல்வேறு தரப்பில் இருந்து ஆதங்கங்கள் வெடித்தன. அதில் ஒருவர்தான் கருணாஸ்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் எங்களுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கருணாஸின் வேண்டுகோளை கண்டுகொள்ளவே இல்லை.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி.. ஜிகே மணி பேச்சு
தமிழக அரசு
இதற்கு பிறகு, கடந்த அதிமுக ஆட்சியில் 10.5 சதவீதம் சட்டம் இயற்றப்பட்டது... இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை கோர்ட் 4 நாளைக்கு முன்பு ரத்து செய்துவிட்டது. அதற்கு சில காரணங்களையும் கூறியிருந்தது. "சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" என்று சொல்லி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
உத்தரவு
இந்த உத்தரவுக்கு பல்வேறு ஆதரவுகள் எழுந்தன.. அதேசமயம், ராமதாஸ் உள்ளிட்டோரிடமிருந்து அதிருப்திகளும் வெடித்தன.. சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகளும் வலுத்தன.. இது தொடர்பாக திமுக எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ள இந்த சூழலில், வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேல்முறையீடு
செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசியபோது, "தமிழக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்முறையீடு செல்லக்கூடாது என்பது என்னுடைய கோரிக்கை... ஏனென்றால், சமூகநீதியை போற்றுகின்றோம், சமூக நீதியை காக்கக்கூடிய அரசு என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கான சமூக நீதியை காக்க வேண்டும். உள் இட ஒதுக்கீடை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அனைத்து சமுதாய மக்களுக்குமான அரசாக இருந்தது.... ஆனால் எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அரசாக மாறி விட்டது.. தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் மீண்டும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்கின்ற பதவி ஆசையில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் வாக்கு வங்கிக்காக மற்ற மக்களை வஞ்சித்து அந்த அவசர சட்டத்தை நிறைவேற்றினார்கள்...
கோர்ட்
ஆனால் அதற்கு தக்க பதிலடியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.. எல்லா சமுதாய மக்களுக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்த அரசு மேல்முறையீடு செய்யாது என்று நம்புகிறேன்.. குறிப்பிட்ட சமுதாயத்திற்கான ஒரு அரசாக இந்த அரசு மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது" என்றார்.