சில்வர் அண்டாவுக்குள் தீபாவளி பரிசு! கரூரில் வீடு வீடாக வழங்கிய செந்தில் பாலாஜி!
கரூர்: கரூர் சட்டசபை தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியை கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கரூர் சட்டசபை தொகுதிக்குள்பட்ட சுமார் 88 ஆயிரம் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி மாநகராட்சி 48 ஆவது வார்டான கோடங்கிப்பட்டியில் இன்று (அக்.18) தொடங்கியது.
கரூர் கோடங்கிப்பட்டியில் இந்த தீபாவளி பரிசு வழங்கும் பணியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அவர் வீடு வீடாக சென்று தீபாவளி பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
முன்னதாக கோடங்கிப்பட்டியில் ஸ்ரீபட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். பரிசுப் பொருட்களையும் கோயிலில் வைதச்து சிறப்பு பூஜை செய்திருந்தார். அந்த பரிசு பையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் படங்களுடன் "இனிய தீபாவளி வாழ்த்துகள்" என அச்சிடப்பட்டிருந்தது.
அது போல் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ, திமுக கரூர் மாவட்டச் செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. 2 அடி உயரமான மூடியுடன் கூடிய சில்வர் அண்டா வழங்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இனிப்பு, கார பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வின் போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் கூறியிருப்பதாவது: " கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் 250 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்க அரசு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐடி பார்க் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி பகுதியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் விடுப்பட்ட பகுதிகளில் ரூ 460 புதை சாக்கடை அமைக்கும் பணி, ரூ 260 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொழில்துறையினர் சொல்லக்கூடிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தால் திரு மாநிலையூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிமுவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டன. விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பேருந்து நிலையம் நகரின் மிக அருகே உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது. மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 300 ஏக்கருக்கு மேல வாங்கிப்போட்டு பேருந்து நிலையம் அமைப்பதாகக்கூறி நிதி ஒதுக்கவில்லை. மாநகராட்சியிடம் நிதி கேட்டனர். திருமாநிலையூரில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று சுயநலமின்றி பேருந்து நிலையம் அமைத்துள்ளோம். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications