தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் நடந்த கொடூரம்.. கரூர் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!
கரூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவே தனி விமானம் மூலமாக கரூர் புறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கரூரில் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் 3வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தவெக தலைவர் விஜய்யை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடிய நிலையில், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். இதன்பின் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, பலரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று இரவே தனி விமானம் மூலமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications