கவரப்பேட்டை ரயில் விபத்து.. வெளியானது எப்ஐஆர் ரிப்போர்ட்.. ஸ்டேஷன் மாஸ்டர் அளித்த பரபரப்பு தகவல்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நேற்று முன் தினம் இரவு பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் உலுக்கிய இந்த ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில், காயம் ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரயில் 35 ரயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை சென்றடையும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் நேற்று முன் தினம், இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் காலிப்பெட்டிகள் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் 19 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனித தவறு காரணமா? அல்லது தொழில்நுட்ப தவறு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான், ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 125 ஏ- மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கடுமையான காயம் ஏற்படும் வகையில் செயல்படுதல், ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக இயக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டேஷன் மாஸ்டர் கிரீன் லைட்டை லோகோ பைலட்டிடம் காண்பிக்க சென்ற போது, கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது. உடனடியாக ரயில்வே ஊழியராக கிரன் குமார் என்பவரிடம் தெரிவித்தாகவும் அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போதுதான் 7 க்கும் மேற்பட்ட பெட்டிகள் அங்கு தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் சம்மன் கொடுத்து விசாரிக்கவும் ரயில்வே போலீசார் திடமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications