சிறுநீரகம் செயலிழந்த மகனின் உயிரை காப்பாற்றிய கேரள தாயின் பாச போராட்டம்
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வேறு ரத்த வகையுடைய தன் மகனுக்கு தனது சிறுநீரகத்தை கொடுத்து அவர் உயிர் வாழ உதவியுள்ளார்.
சென்னை: கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வேறு ரத்த வகையுடைய தன் மகனுக்கு தனது சிறுநீரகத்தை கொடுத்து அவர் உயிர் வாழ உதவியுள்ளார். மாநிலம் விட்டு மாநிலம் வந்து தன் மகனின் உயிரைக் காக்க போராடிய கேரளத்து தாயின் பாச போராட்டம் பற்றியும் நெகிழவைக்கும் உண்மைச் சம்பவம் பற்றியும் பார்க்கலாம்.
ஒருவரின் உடல் உறுப்புகளை மற்றொருவருக்குப் பொருத்த, ரத்த வகைகள் ஒரே வகையாக அல்லது இணக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம். இவையல்லாத, மாற்று ரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, அவை பொருந்தாமல் போகலாம். மேலும், அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். சில சிறப்பு சிகிச்சைகள் செய்த பின்னரே, இத்தகைய அரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்த வகையான அறுவை சிகிச்சையும், மருத்துவ முறைகளும் பெரும்பாலான மருத்துவமனைகளில் செய்ய முடியாது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் விஸ்வநாத்,33, சிறுநீரக செயல் இழப்பினால் பாதிக்கப்பட்டார். தனது பெற்ற மகனே உயிர்வாழ கிட்னி இல்லாமல் அவதிப்படும் போது வயதான தனக்கு கிட்னி எதற்கு என்று முடிவெடுத்தார் 50 வயதான அவருடைய தாயார் பெயர் லிசி.
தன் மகனுக்கு தனது சிறுநீரகத்தை எடுத்து பொருத்தும் படி டாக்டர்களிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால், அவருக்கும் மகனுக்கும் வெவ்வேறு ரத்த வகைகள் என்பதால் டாக்டர்கள், அவ்வாறு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது முடியாது என மறுத்து விட்டனர். பல மருத்துவமனைகளுக்கும் சென்று திரும்பியவர், இறுதியில் கேரளத்தை விட்டும் வெளியேறினார்.
தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்தவர் வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை செய்து, தன் மகனை காப்பாற்றும்படி கேட்டார். அவ்வளவு எளிதாக செய்யக்கூடிய சிகிச்சை அல்ல இது. வெவ்வேறு வகையான ரத்த வகைகளுடன் உள்ளவர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடலியல் ரீதியாக பல பிரச்சினைகளும் வர வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், தன் மகனைக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் லிசி.
மகனுக்கு பொருந்தக்கூடிய ரத்த பிரிவில் கிட்னியை தானமாக பெற வேண்டுமெனில், அதற்கு லட்சங்களில் செலவாகும் என்னும் நிலையில், அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை. கையில் பணமும் இல்லை.
அதேசமயம், மகன் உயிரையும் காக்க வேண்டும். எப்படியாவது தனது சிறுநீரகத்தை மகனுக்கு கொடுத்து விடும்படி மருத்துவமனை மருத்துவர்களிடம் கெஞ்சிப் பார்த்தார். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை அவர்களும் செய்ய சம்மதித்தனர். அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாரானது பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவர் குழு.
விஸ்வநாத்தின் ரத்த வகை 'ஓ' பாசிட்டிவ், அவரது தாயாரின் ரத்த வகை 'பி' பாசிட்டிவ். டாக்டர். ஷேக் அலாவுதீன், டாக்டர். ஹர்ஷவர்தன் மற்றும் டாக்டர். குரு பாலாஜி தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. அதற்கான முன்னேற்பாடு சிகிச்சைகளும் செய்யப்பட்டு செய்து பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு சிறுநீரகத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்தனர். இப்போது தாயும் மகனும் நலமாக உள்ளனர்.
தன் மகனைப் பெற்றேடுத்து, உயிர் கொடுத்த போது இருந்த மகிழ்ச்சியை விட, இப்போது இரட்டிப்பாக மகிழ்வதாக நெகிழ்வாக தெரிவித்தார் லிசி. குடும்பத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு ரத்த வகை கொண்டவர்களாக இருந்தாலும், இனி இந்த சிகிச்சையைச் செய்ய முடியும்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்குச் செலவு செய்ய முடியாத நடுத்தர வர்க்க மக்களுக்கு, இந்த சிகிச்சை புதிய நம்பிகையைக் கொடுத்துள்ளதாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர். கீதா ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications