"மர்மம்".. ரூமிலேயே இறந்து கிடந்த திருநங்கை அனன்யா.. கேரளாவில் ஷாக் சம்பவம்.. பதற வைக்கும் பின்னணி
சென்னை: கேரளாவில் LGBTQ+ உரிமைக்கு குரல் கொடுப்பவரும், ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸ் நேற்று மாலை அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருநங்கையான அவர் இறந்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். திருநங்கையான இவர் கேரளாவில் LGBTQ+ பிரிவினர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.
அதோடு ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பலரை கவர்ந்தவர். கேரளாவில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நபர்களில் அனன்யா முக்கியமான நபராக பார்க்கப்பட்டு வந்தார். இவருக்கு 28 வயதுதான் ஆகிறது.

தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலின் போது DSJP எனப்படும் டெமோக்ரடிக் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார். வேங்கரா பகுதியில் தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரளாவில் திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தது இதுவே முதல்முறை. ஆனால் கட்சிக்கு உள்ளேயே இவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

கொலை மிரட்டல்
இவருக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. இதன் காரணமாக கடைசி நொடியில் வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இடதுசாரிகளுக்கு எதிராக தரைகுறைவாக பேச சொல்லி வற்புறுத்தியதாக கூறி DSJP கட்சி மீது புகார் வைத்துவிட்டு அப்போதே வேட்புமனுவை இவர் வாபஸ் வாங்கி இருந்தார்.

கேரளா சபரிமலை
2018ல் சபரிமலை பிரச்சனை சென்று கொண்டு இருந்தது. இளம் பெண்களுக்கு கோவிலுக்கு உள்ளே அனுமதி கூடாது என்று போராட்டங்கள் நடந்தது. அப்போது அனன்யா மற்றும் இன்னும் 3 திருநங்கைகள் நேராக கோவிலுக்குள் சென்று வெற்றிகரமாக தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலினம்
இந்த நிலையில் பாலின மாற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக அனன்யா சிகிச்சை எடுத்து வந்தார். 2020ல் இவர் gender reassignment surgery எனப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த சிகிச்சைக்கு பின் இவருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. சரியாக நிற்க முடியாமல்,நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். வலியில் வேதனைப்பட்டு இருக்கிறார்.

வேலை
அதேபோல் சரியாக பணிகளை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். தனக்கு சர்ஜரி செய்யும் போது தவறு நேர்ந்துவிட்டது. சர்ஜரியில் நிகழ்ந்த குறைபாடு காரணமாக நான் கஷ்டப்படுகிறேன், எனக்கு உதவுங்கள் என்று பல முறை அனன்யா கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் கொச்சியில் அனன்யா அவரின் வீட்டில் இன்று இறந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார்.

தூக்கு
அனன்யாவை சந்திக்க அவரின் பிளாட்டிற்கு சென்ற நண்பர்கள், அவர் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த மரணம் ஏன் நிகழ்ந்தது, உடல் வலி காரணமாக அனன்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதற்கு வேறு காரணம் இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அரசியல்
அரசியல் ரீதியாக, மத ரீதியாக இவருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. இதனால் அனன்யா மரணத்தில் நிறைய மர்மங்கள் நிலவி வருகின்றன. இது தொடர்பாக அனன்யாவின் நண்பர்கள், சக திருநங்கைகள், LGBTQ+பிரிவினர் முதல்வர் விஜயனின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications