கேசவ விநாயகம் - அண்ணாமலை இடையே நீடித்த பனிப்போர்.. பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் மாற்றம் ஏன்? பின்னணி
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் இன்று நடந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தரப்பினரிடம் இருந்து கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக பாஜக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் திடீரென மாற்றப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அமைப்பு செயலாளர் என்பது மிக மிக முக்கிய பொறுப்பாகும்.

பாஜக அமைப்பு செயலாளர் பொறுப்பு
தலைவர் பதவியில் கூட ஆர்.எஸ்.எஸ் சாராத ஒருவர் நியமனம் செய்யப்படுவதுண்டு. ஆனால், அமைப்பு செயலாளர் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இல்லாத நபரை சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேசவ விநாயகம் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில், அண்ணாமலையுடன் அவருக்கு பனிப்போர் நீடித்து வந்தது.
பாஜகவில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்து திருச்சி சிவா, கட்சியில் இருந்து விலகி வந்ததற்கு கேசவ விநாயகத்தையே குற்றம் சாட்டி பேசியிருந்தார். பாஜகவில் மாநில பாஜக தலைவருக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் இருந்தாலும், நிர்வாக ரீதியான அதிகாரம் அமைப்புப் பொதுச் செயலாளரிடம் இருக்கும்.
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
எனவேதான் அண்ணாமலை பதவி வகித்த போது பலமுறை இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்ததாக பாஜக உள்வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பே கேசவ விநாயகம் மாற்றப்படலாம் என்று பேச்சும் பாஜக வட்டாரத்தில் இருந்து வந்துள்ளது. தேசிய அளவில் பாஜகவிற்கு புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பதவியேற்ற சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் மிக முக்கிய பொறுப்பை பாஜக தலைமை மாற்றியுள்ளது. இன்று சென்னையில் பாஜக மேலிட தலைவர் பிஎல் சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அண்ணாமலை குறித்து யாரும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலைக்கு எதிராக பேச வேண்டாம்
"அண்ணாமலை தேர்தல் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பது முழுக்க முழுக்க அவரது பெற்றோரின் உடல்நலக் காரணங்களுக்காக மட்டுமே. இது ஒரு தனிப்பட்ட மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான முடிவு. எனவே, அண்ணாமலைக்கு எதிராகவோ அல்லது அவரது முடிவுகள் குறித்தோ எவரும் தவறாகப் பேசக்கூடாது என்று பிஎல் சந்தோஷ் கூறியிருந்தார்.
அண்ணாமலை தரப்பு வலியுறுத்தல்?
அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து தந்தையின் உடல் நலனை காரணம் காட்டி விலகியிருந்தார். மேலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று விரக்தியாய் பேசியிருந்தார். இந்த நிலையில்தான், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தரப்பினரிடம் இருந்து கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்தே, அண்ணாமலை உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று , கேசவ விநாயகத்தை மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பாஜகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications