கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு.. திறக்கப்படாத கிளாம்பாக்கத்தில் அந்த 3 மேட்டர்.. கியரை மாற்றிய தமிழக அரசு
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் கசிந்து கொண்டிருக்கின்றன.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு புகார் வெடித்து கிளம்பி உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டு அமைப்பதற்காக, 88 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டபோது, இந்திய தொல்லிய துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், பள்ளம் தோண்டி மண் அள்ள தடை இருந்தும்கூட, 12 அடி ஆழம் வரை தோண்டி செம்மண் எடுத்து செல்லப்படுவதாக சிஎம்டிஏ உயரதிகாரிகளுக்கு புகார் வந்திருக்கிறது.
கள ஆய்வுகள்: இந்த புகாரின் அடிப்படையில், 2 நாட்களுக்கு முன்புகூட, தொல்லியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட இடத்தில் மண் எடுக்கப்பட்டது குறித்தும் கள ஆய்வு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து, சிஎம்டிஏவுக்கு கடிதம் அனுப்ப போவதாகவும் சொல்லி உள்ளனர். இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையான ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கும், இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவும் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் திறப்பதில் பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாக சேர்ந்துள்ளதால், பஸ் ஸ்டாண்டு திறப்பு இன்னும் தள்ளிப்போகும் என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், இதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்து சிஎம்டிஏ உறுப்பினர்கள் தரப்பில் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கால்வாய் பணிகள்: அதாவது, "மழைநீர் வடிகால் அமைப்பதில் முதல் கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், ஜிஎஸ்டி சாலையின் குறுக்காக கால்வாய் அமைக்க வேண்டும்.. இந்த பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்கிறார்கள்.
அதேபோல, இப்போதைக்கு இந்த இடத்தில், 150 அடி அகலம் உள்ள ஜிஎஸ்டி சாலையில், 10 அல்லது, 15 அடி வாரியாகதான் கால்வாய் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியுமாம்.. ஒவ்வொரு கட்டத்திலும், கான்கிரீட் நீராற்றுவதற்கு மட்டுமே 20 நாட்கள் வரை தேவைப்படும் என்கிறார்கள்.. இந்த மாத இறுதியில் இந்த பணிகளை துவங்கினாலும், எப்படியும் மொத்த பணிகளையும் முடிக்க, குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்கிறார்கள்.
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை இயக்குதல், பராமரித்தல் பணிக்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய சிஎம்டிஏ அதிகாரிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும், இதில் தேர்வாகும் நிறுவனம், 15 வருட குத்தகை அடிப்படையில் பேருந்து நிலையத்தை இயக்கும் என்றும் இன்னொரு தகவல் இணையத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.
பெருத்த முயற்சி: இப்படி நாளுக்கு நாள் எத்தனையோ யூகங்களும், தகவல்களும் மாறி மாறி வந்தாலும், இந்த பஸ் ஸ்டாண்டு திறப்பதில் தமிழக அரசு பெருத்த முயற்சி எடுத்து வருகிறது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடும்போது, அதனால், மக்கள் சிறிதளவுகூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலேயே அரசு பெரும் முயற்சியை எடுத்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications