கோடை மழை..5 நாட்களுக்கு இடி மின்னலுடன் அடி தூள்..இரவு வெப்பநிலை குறையும்..பாலச்சந்திரன் குட்நியூஸ்
மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைக்காலங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும்.
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழை பெய்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் காலையில் மிதமாக பெய்த மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. வேளச்சேரியில்ஆலங்கட்டி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியிலேயே தமிழ்நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பம் சுட்டெரித்த நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

கோடை வெப்பம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கினர். இந்த நிலையில் கோடையை குளிர்விக்கும் வகையில் நேற்றிரவு தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னையின் பல பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. காலை 11 மணி அளவில், மீண்டும் சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

ஆலங்கட்டி மழை
வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வில்லிவாக்கம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வேளச்சேரி பகுதியில் சாரல் மழையாக தொடங்கி கனமழையாக மாறியது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாக கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.

5 நாட்களுக்கு மழை
இதனிடையே தமிழ்நாடு புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாலச்சந்திரன்
மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழை பெய்கிறது என்று கூறியுள்ளார்.

கோடை மழைக்கு காரணம்
வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததாக செய்திகள் வெளியான நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு தெற்காக கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்றன. இதனால் வரும் 20 தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை கோடை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இரவு நேர வெப்பம் குறையும்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரிமாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இங்கும் அங்குமாக கோடை மழை பெய்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைக்காலங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும்.

கொட்டித்தீர்த்த மழை
சென்னையை பொறுத்தவரை கோடை மழை என்பதால் முகலிவாக்கம், பெருங்குடியில் 6 செ.மீ, ஆலந்தூர், மீனம்பாக்கத்தில் 5 செ.மீ, கோடம்பாக்கம், தரமணியில் 4 செ.மீ, நந்தனத்தில் 1 மி.மீ, எம்.ஆர்.சி நகரில் 6 மி.மீ, வில்லிவாக்கத்தில் 6 மி.மீ மழை பதிவாகி உள்ளது கனமழைக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications