கோடநாடு கொலை.. முதல்வர் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள்.. எடப்பாடி சொன்ன 3 பதில்கள்.. நடந்தது என்ன?
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் முக்கியமான 4 கேள்விகளை எழுப்பினார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 5 தனிப்படை போலீசார் ஊட்டி தொடங்கி நேபாளம் வரை இந்த வழக்கில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றமும் கூறிவிட்டது, மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் மேல் விசாரணைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல் விசாரணை நடத்த தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த வழக்கில் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊட்டி நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. 2 முறை உயர் நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி இருக்கும் போது இதில் மேல் விசாரணை நடத்துவது தவறு என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்து உள்ளார்.

விமர்சனம்
இதன் காரணமாகவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. கோடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார். சயான் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு இந்த வழக்கு அணுகப்படுவதை காட்டுகிறது. முடியப்போகும் வழக்கை மீண்டும் மேல் விசாரணை செய்து தேவையின்றி சர்ச்சையாக்குகிறார்கள். அரசியல் திட்டங்களுக்காக இப்படி செய்கிறார்கள் என்று கடந்த வாரமே எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வெளியே கோபமாக பேசி இருந்தார்.

கோபம்
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ சுதர்சனம், கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார். இதை கேட்டதும் கொதித்து போன எடப்பாடி பழனிசாமி.. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி அதை பற்றி அவையில் பேச முடியும். இது தவறு என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். அதோடு எம்எல்ஏ சுதர்சனமின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எடப்பாடி கூறினார்.

ஸ்டாலின்
இதற்கு எழுந்து பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், எம்எல்ஏ சுதர்சனம் வழக்கு குறித்து பேசவில்லை. வழக்கு விசாரணைக்கு உள்ளே அவர் செல்லவில்லை. வழக்கை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்றே கூறினார். அதனால் இதை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று குறிப்பிட்டார். இதற்கு பின்தான் அவையில் முக்கியமான நான்கு கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். இதை கேட்டு அதிமுக தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

நான்கு கேள்விகள்
ஸ்டாலின் வைத்த நான்கு கேள்விகள்
கேள்வி 1: கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த அன்று சரியாக சிசிடிவி செயல்படாமல் போனது ஏன்?
கேள்வி 2: கோடநாடு வழக்கில் தடை கோரியது யார்? வழக்குக்கு தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்றது யார்?
கேள்வி 3: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்தது யார்? கோடநாடு சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்..?
கேள்வி 4: கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் கோடநாடு வழக்கில் முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்போது ஏன் வழக்கை முடிக்கவில்லை?

கேள்விகள் காரணம்
முதல்வர் ஸ்டாலின் வைத்த நான்கு கேள்விகள்தான் இந்த வழக்கில் அடிநாதம் ஆகும். இந்த எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த அன்று சரியாக சிசிடிவி செயல்படாமல் போனது, அதன்பின்பான மர்ம மரணங்கள் ஆகியவைதான் இந்த வழக்கின் அடிநாதம். அதைத்தான் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினும் எழுப்பினார். அதோடு அதிமுக இந்த வழக்கை இப்போது விரைந்து விசாரிக்க வேண்டும் என்கிறது. முன்பே ஏன் இதை விசாரிக்கவில்லை என்ற கேள்வியை வைத்தார். இதெல்லாம் போக அப்போது நீங்கள் தானே முதல்வராக இருந்தீர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் செக் வைப்பது போல பேசினார்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மூன்று பதில்களை அளித்தார்.
பதில் 1: கோடநாடு சம்பவம் குறித்து முறைப்படி எங்கள் ஆட்சியிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு எதிராக நாங்கள் எங்கும் பேசவில்லை. வேண்டும் என்றே எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது.
பதில் 2: வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை, எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை. நாங்கள் நேரடியாக வழக்கு தொடுக்கவில்லை.
பதில் 3: கோடநாடு தனியார் சொத்து. அதை தனியார் நிர்வகித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது அதற்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? என்று பதில் அளித்தார்.

அதிமுக
அதிமுக உறுப்பினர்கள் இந்த மேல் விசாரணை காழ்புணர்ச்சியானது என்று பேட்டி மட்டுமே அளித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு அதிமுக நேரடியாக வழக்கு ரீதியாக எங்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனுபவ் ரவி சாட்சியம் என்ற அளவிலேயே மேல் விசாரணைக்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதிமுக சார்பாக வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications