18000 புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது என்னவானது? அதிகாரிகள் வேகமாக இயங்கணும் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: பாழடைந்த பள்ளிக்கட்டிடங்கள் என்ன வேகத்தில் இடிக்கப்பட்டதோ அதே வேகத்தில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட சமீபநாட்களாக இவரது அறிக்கைகள் அனைத்தும் அனல் பறக்கும் வகையிலும் அரசை விமர்சிக்கும் வகையிலும் உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பள்ளிக் கட்டிடங்கள்
கடந்த வருடம் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த போது தமிழகம் முழுதும் சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. பராமரிக்க முடியும் என்று தெரிந்த கட்டிடங்களைக் கூட புதுக் கட்டிடம் கட்டப்படும் என்ற வாக்குறுதிகளோடு பல கட்டிடங்கள் இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டன. திரும்ப அவற்றை கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட வேண்டும்.

நல்ல முன்னெடுப்பு
இப்போது பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்ற நடைமுறைகளில் பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்ல முன்னெடுப்பு தான், ஆனால் மாற்று ஏற்பாடுகளுக்கான திட்டங்கள் இல்லாமல் இடிக்கப்படும் போது பள்ளிக் குழந்தைகள் மரத்தடியில் கல்வி கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

18000 புதிய வகுப்பறைகள்
பள்ளிக் கட்டிடங்களை பொறுத்தவரை அதனுடைய அத்தியாவசியம் கருதி நடவடிக்கைகள் வேகப்படுத்த வேண்டும். சென்ற நிதிநிலை அறிக்கையில் 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது. அந்த சிறப்பான திட்டங்களை வேகப்படுத்தி நிறைவேற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாற்று ஏற்பாடுகள்
புதிய மாற்று ஏற்பாடுகளை தயார்படுத்தி வைத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிக்கல்வி என்பது தமிழகத்தின் எதிர்கால தலைமுறையை திறனுள்ளதாக உருவாக்கக் கூடியது. பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் கவனத்தோடு சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டால் இப்போது நடக்கின்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.












Click it and Unblock the Notifications