ஆளுநர் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க காலம் நெருங்கிவிட்டது! அனல் கக்கிய கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: ஆளுநர் ரவி வெறும் அம்பு தான் என்றும் அவரை எய்தவர்கள் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.
சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து பேசிய போது அவர் இவ்வாறு ஆளுநர் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

எய்தப்பட்ட வேகத்தை விட அம்பு கொஞ்சம் ஓவராக ஆடுகிறது என்று கூறிய ஈஸ்வரன் ஆளுநர் ரவியை சூசகமாக தாக்கிப் பேசினார். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தோ, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியோ ஒரு நாளாவது முதலமைச்சர் ஸ்டாலினையோ, அமைச்சர்களையோ அழைத்து ஆளுநர் ரவி பேசியிருப்பாரா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிற்கு தனது பதவிக்காலத்தில் இந்த நல்லதை நான் செய்திருக்கிறேன் என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா என வினவிய ஈஸ்வரன் ஆளுநர்கள் இடையூறு செய்வது இன்று நேற்றல்ல 60 ஆண்டுகால பிரச்சனையாக உள்ளது என்றார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை, தமிழக அரசு இயற்றிய சட்டங்களை முடக்குவதற்கு என்ன காரணம் என்பதை கூட ஆளுநர் ரவியால் சொல்ல முடியவில்லை என ஈஸ்வரன் சாடினார்.
ஆளுநர் பதவி என்பது இனி தொடரவே கூடாது என்று ஆவேசமாக பேசிய ஈஸ்வரன், முதலமைச்சர் ஸ்டாலின் காலத்திலாவது இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்றார். ஆளுநர்களின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்தவர், நமக்கு வேலை வைக்காமல் உச்சநீதிமன்றமே ஆளுநர்களுக்கு கடிவாளம் போட்டுவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் ஈஸ்வரன்.












Click it and Unblock the Notifications