கோவில்பட்டி வீரலட்சுமி.. வரலாறு தெரியலை.. பதற்றம் ஏன் அண்ணாமலை?.. கேட்கிறார் வீரலட்சுமி
சென்னை: கோவில்பட்டி வீரலட்சுமியின் வாழ்ந்த காலம் வரலாறு தெரியாமல் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி. தம் மீது 1000 கோடி ஊழல் புகார் கூறியது யார் என்றே தெரியாது என்று அண்ணாமலை கூறியதற்கு பதிலடி அளித்துள்ளார் வீரலட்சுமி. என் பேரை கேட்டாலே இனி நீங்கள் பதற்றப்படுவீர்கள் என்றும் கூறியுள்ளார் வீரலட்சுமி.
தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது. பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்ஜி பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர்.

இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மாநில பாஜக தலைவர் அண்ணாமலைதான். இது தொடர்பாக அவர்களுடைய சொத்து பத்திர விவரங்களை சேகரித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித் துறையிடம் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டது. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் 26ஆம் தேதி 3ஆவது முறையாக புகார் அளிக்க உள்ளோம் என்று கூறினார்.
இதில் அண்ணாமலையின் பெயரை நாங்கள் ஏன் சேர்க்கிறோம் என்றால் சென்னை- பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் இணைந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதை முறியடிக்கத்தான் நாங்கள் ஆவணங்களை திரட்டி 26 ஆம் தேதி புகார் கொடுக்கிறோம். மாலினி ஜெயசந்திரன் , எம்.ஜி பாஸ்கர், அண்ணாமலை ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம் என்றார்.
இது பற்றி செய்தியாளர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலையோ எனக்கு தெரிஞ்ச ஒரே வீரலட்சுமி, கோவில்பட்டியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிய வீராங்கனை வீரலட்சுமி மட்டும்தான். மற்றபடி, வீரலட்சுமி, சூரலட்சுமி, பங்காருலட்சுமி இவங்க எல்லாம் யாருண்ணே எனக்கு தெரியாது" என அண்ணாமலை கூறினார். அப்படி அவங்க கிட்ட என்னோட ஊழல் விஷயம் இருந்தால், அவங்க தாராளமா வெளியிடட்டும்" என சிரித்துக் கொண்டே கூறினார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதில் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளார் வீரலட்சுமி, அவரது வீடியோவில், அண்ணாமலை அவர்களே, வீரலட்சுமியா?அப்படி யாரும் தெரியாது என்று சொன்னீங்க.. அதோட நிறுத்தியிருக்கலாம். அடுத்து நீங்க ஒரு பாயிண்ட் சொன்னீங்க பாருங்க அதை கேட்டு தமிழ்நாடே சிரித்திருக்கும். அதைக்கேட்டு நாங்களும் சிரித்தோம்.
கோவில்பட்டி வீரலட்சுமி அம்மையார் 1961ல் இருந்து 1990 வரைதான் அவர் வாழ்ந்த காலம். கோவில்பட்டி வீரலட்சுமி எப்போது பிறந்தார்கள், எப்போது வாழ்ந்தார்கள் எதற்காக போராடினார்கள் என்ற வரலாறு கூட தெரியவில்லை. அதோடு ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு எப்போது போனார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று வீரலட்சுமி கிண்டலடித்தார்.
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்த உடனே ஒரு பதற்றம் இருக்கு உங்களுக்கு. வீரலட்சுமி என்கிற பெயருக்கு ஒரு பவர் இருக்குல்ல. என் பேரை கேட்ட உடனே உங்க முகத்தில் வேண்டுமானால் பதற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுடைய பேச்சில் பதற்றம் தெரிந்தது. இதற்குப் பிறகு இந்த வீரலட்சுமியின் செயல்பாட்டால் நீங்கள் பதற்றப்பட்டு உளறுவீர்கள் என்று கூறியுள்ளார் வீரலட்சுமி.












Click it and Unblock the Notifications