அண்ணாமலை மீது பகீர் புகார் கூறிய கிருஷ்ண பிரபு அதிமுகவுக்கு ‘ஜம்ப்’.. எடப்பாடியின் அடுத்த யார்க்கர்!
சென்னை : பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய மாநில நிர்வாகி கிருஷ்ண பிரபு அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். ஆருத்ரா மோசடி விவகாரம் காரணமாகவே தான் பாஜகவில் இருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார் கிருஷ்ண பிரபு.
சமீப காலமாக பாஜகவில் இருந்து சிடி நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி, அக்கட்சியின் பொருளாதார மாநில பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்திருந்தார்.

அதிரடி விலகல் : பாஜகவில் பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அண்ணாமலையை விமர்சித்துவிட்டு, பாஜகவில் இருந்து விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாகவும் இதை பாஜக தலைமை கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள் சரியாகச் பட செயல்படவில்லை என்றும், இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்புகள் வரும் என்று கருதுவதால் இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் என்றும் கிருஷ்ண பிரபு தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுகவுக்கு ஜம்ப் : இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் முன்னிலையில் கிருஷ்ணபிரபு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணபிரபு, "தமிழ்நாடு பாஜகவினர், ஆருத்ரா பைனான்ஸ் மோசடி விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அதன் பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து வருவதாகவும், இந்த விவகாரத்தால் தான் பாஜகவில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாகவும், இளைஞர்கள் மத்தியிலும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிருஷ்ணபிரபு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தது பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்தது. இந்தநிலையில் ஆருத்ரா மோசடி தொடர்பாக அண்ணாமலையை விமர்சித்துவிட்டு அதிமுகவில் மற்றொரு மாநில நிர்வாகி இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications