6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது.. திமுக, அதிமுகவை தொடர்ந்து கிருஷ்ணசாமியும் ஆளுநரிடம் புகார்
சென்னை: தவெக அரசு தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழக ஆளுநர் அர்லேக்கரிடம் புகார் மனு அளித்துள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். "6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது.. கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரனும்" என புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
தமிழத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கமால் போனது. தனிப்பெரும் கட்சியாக தவெக 108 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்பட்டதால் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்தார்.

குதிரை பேரம் குற்றச்சாட்டு
விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக ஆதரவு அளித்த சில நாட்களில் அந்த கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். ஆளும் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மற்றொரு பக்கம், விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெற்றதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரையும் போலீஸ் தேடியது. தற்போது அவர்களுக்கு கோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வாறாக தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, தவெக அரசுக்கு எதிராக குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக மற்றும் திமுக ஆளுநர் அர்லேகரிடம் புகாரளித்துள்ளது.
இடைத்தேர்தல் நடத்தகூடாது
இந்த சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்னசாமியும் தவெகவுக்கு எதிராக ஆளுநரிடம் புகாரளித்து கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:- "2026 பொதுத்தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. அதற்குள் 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
தினம் ஒரு ராஜினாமா என்பது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த 6 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தகூடாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களது சொந்த விருப்பத்தில் பதவியை விட்டு விலகவில்லை. அரசியல் ஆதாயத்திற்காகவே இவ்வாறு செய்துள்ளனர். எனவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அதிமுகவில் இருக்கும் 90 சதவீத நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவோம் என பேசுவது எல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications