Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிருகம் கூட வெட்கித் தலைகுனியும் கொடூரம்! தாய்மைக்கு குன்றத்தூர் அபிராமி இழைத்த அநீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது. தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும் தாய்மையின் புனிதத்திற்குச் சான்றாக நிற்கிறது. ஆனால், மனித உருவில் பிறந்து, அந்தத் தாய்மைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்திய ஒருவர் பெயர் அபிராமி. கள்ளக்காதல் என்ற சுயநல மோகத்திற்காக, தான் பெற்ற குழந்தைகளையே ஈவு இரக்கமின்றிக் கொன்ற இந்த நிகழ்வு, மனித சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று. இன்று நீதிமன்றம் அவருக்குத் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இந்த கொடூரச் செயலை திரும்பிப் பார்ப்பது அவசியமாகிறது.

குரூரத்தின் உச்சம் தொட்ட செயல்

குன்றத்தூர் அபிராமியின் கதை, தாய்மையின் பெயரால் நடந்த ஒரு சரித்திரப் பிழை. கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்த அபிராமிக்கு, பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதல், அவரது கண்ணை மறைத்தது. அந்தக் காதலுக்குத் தன் குழந்தைகள் 'தடைகளாக' தெரிந்தார்கள் என்பதே இந்த வழக்கின் மிகக் கொடூரமான பகுதி.

ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் சுமையாகத் தெரிவது எப்போது? மிருகங்கள் கூட தன் குட்டிகளைச் சுமையாகக் கருதுவதில்லை. பசியோடு இருந்தாலும், முதலில் தன் குட்டிகளுக்கு உணவூட்டிவிட்டுப் பிறகுதான் உண்ணும். ஆனால் அபிராமியோ, பாலில் விஷத்தைக் கலந்து, தன் பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்தார். இது ஒரு கொலை மட்டுமல்ல, நம்பிக்கைத் துரோகத்தின் உச்சம்.

Kundrathur Abirami Crime

ஒருவேளை காமத்திற்காக இந்த பெண் தனது மகனையும், மகளையும் கொல்லாமல் இருந்திருந்தால், அந்த சிறுவனுக்கு இப்போது 13 வயசு ஆகி இருக்கும். பெண் குழந்தைக்கு இப்போ 11 வயசு ஆகியிருக்கும் முறையே 8ம் வகுப்பும் 6ம் வகுப்பும் படித்துக் கொண்டு நண்பர்களுடனும் பெற்றோருடனும் உறவுகளோடும் எந்தவித கவலையுமின்றி சிட்டுக்குரிவிகளைப் போன்று ஒரு மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் அல்லவா.

மிருகத்திடம் பாடம் கற்கத் தவறிய அபிராமி

ஒரு கோழி கூட, பருந்து தன் குஞ்சுகளைத் தூக்க வரும்போது தன் உயிரைப் பொருட்படுத்தாமல் எதிர்த்துப் போராடும். ஒரு நாய், தன் குட்டிகளை யாராவது நெருங்கினால் மூர்க்கமாகக் குரைத்துக் காக்கும். உலகில் எந்த மிருகமாவது தன் காம இன்பத்திற்காக தன் குட்டிகளைக் கொன்றதைக் கண்டதுண்டா? நிச்சயம் இல்லை. மிக அரிதாக நடந்துள்ளன. அதுவும் ஆண் மிருகங்கள்தான் பெண்ணை அடைய இப்படிச் செய்திருக்குமே தவிர, தாய் மிருகம் அப்படிச் செய்யாது. மிருகங்களின் உலகில், சந்ததியைப் பாதுகாப்பது என்பது அவற்றின் அடிப்படை இயல்பு.

ஆனால், ஆறறிவு படைத்த மனிதப் பிறவியான அபிராமி, இந்த அடிப்படை இயல்பைக் கூட கொண்டிருக்கவில்லை. அவரை 'மிருகம்' என்று வர்ணிப்பது கூட, அந்த அப்பாவி விலங்குகளை அவமானப்படுத்துவது போலாகும். மிருகங்கள் தங்கள் இன விருத்திக்காகவும், பாதுகாப்புக்காகவும் மட்டுமே மூர்க்கத்தைக் கையாளும். அபிராமியோ, தன் சுயநல இன்பத்திற்காக, தன் ரத்தத்தில் உதித்த இரண்டு உயிர்களைத் திட்டமிட்டு அழித்திருக்கிறார். எனவே, அவர் மிருகத்தை விடவும் கீழானவர் என்பதே நிதர்சனம்.

தீர்ப்பும், தீராத வலியும்

நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தன் கடமையைச் செய்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு, இனி இதுபோன்ற கொடூர எண்ணம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமையலாம். ஆனால், இந்தத் தீர்ப்பால் இழந்த உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா? ஒரு தகப்பனின் நெஞ்சில் ஆறாத ரணமாய் இருக்கும் அந்தப் பிஞ்சுகளின் நினைவை அழிக்க முடியுமா?

அபிராமி என்ற பெயர், இனி 'தாய்மை' என்ற புனிதமான வார்த்தையின் மீது விழுந்த அழிக்க முடியாத கறையாக வரலாற்றில் நிலைத்துவிடும். பெற்ற குழந்தைகளையே கொல்லத் துணிந்த இவரைப் போன்றவர்கள், மனித குலத்திற்கே அவமானம். எந்த மிருகமும் செய்யத் துணியாத இந்தச் செயலைச் செய்த அபிராமி, தாய்மை என்ற பதத்திற்குத் தகுதியற்றவர் மட்டுமல்ல, மனிதப் பிறவி என்பதற்கே தகுதியற்றவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+