திருவள்ளூரின் "கலர்" மாறுது.. கியரை மாற்றிய குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணி.. அடடே பேருந்து நிலையம்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதையடுத்து, குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன... இந்த பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா?
கோயம்பேட்டிலிருந்து, 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குத்தம்பாக்கம்.. பூந்தமல்லியில் இருந்து 10 கிமீதூரத்தில் உள்ளது.. கடந்த 2019ம் ஆண்டு, குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பணிகள்: மொத்தம் 24.8 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடியில், கடந்த 2021 பிப்ரவரியில், பஸ் ஸ்டாண்டு கட்டும் பணிகள் ஆரம்பமாகின. பாத்ரூம் வசதி, பணியாளர்கள் ஓய்வறை போன்ற கூடுதல் வசதிகளுடன், மொத்தம் 396 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு இந்த குத்தம்பாக்கம்தான்.
கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்கள் வழியே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கும், அதேபோல, தர்மபுரி, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கும் குத்தம்பாக்கத்திலிருந்து பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.. அதாவது, 136 பஸ்கள் நிறுத்துவதற்குரிய வசதிகள் இங்கு தயாராகி கொண்டிருக்கிறதாம்.
ஆம்னி பஸ்கள்: குத்தம்பாக்கம் நிலையத்தில் புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பஸ்களை நிறுத்த முடியுமாம்.. அந்தவகையில், பஸ் ஸ்டாண்டின் கீழ்த்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்களும், 235 4 சக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் வடிவமைக்கப்பட்டு, பணிகளும் நடந்து வருகிறதாம்.
அதேபோல, பயணிகளுக்காகவே, 4 லிப்டுகள், எஸ்கிலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) போன்றவையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.. இதுபோக வைஃபை உள்ளிட்ட வசதிகளும், ஒரு கன்ட்ரோல் ரூம் அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை : குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் இயங்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றனவாம்.
ஏற்கனவே, மாதவரம் பேருந்து நிலையத்திற்கு, கோயம்பேடிலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் நிலையங்களுக்கும், கோயம்பேடில் இருந்தும், மாநகரின் முக்கிய பகுதிகளில் இருந்தும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம்: ஆனால், கிளாம்பாக்கத்தை போலவே, இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கு ரயில் வசதியோ, மெட்ரோ வசதியோ, இதுவரை இல்லை என்பதால், இணைப்பு வசதிகள் இனிமேல் அமைக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால், நசரத்பேட்டை வரை மெட்ரோ ரயில் உள்ளதால், இதனையே குத்தம்பாக்கம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
வருகிற டிசம்பருக்குள் இந்த பஸ் ஸ்டாண்டு வேலைகள் முடிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர்சேகர்பாபு ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதனால், அதற்கு முன்னதாகவே, குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து தமிழக அரசு தயாராக வைத்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு: எப்படியோ, மொத்தத்தில், பெங்களூரு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு இந்த பஸ் ஸ்டாண்டு வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த பஸ் ஸ்டாண்டும் திறக்கப்பட்டுவிட்டால், நெரிசல் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இன்னும் வெகுவாக குறைந்துவிடும் என்றே நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications