பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார்... எல்.முருகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் முருகன் இன்றும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 200 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன் தேர்தல் பணிகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.
6 மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
அரசியல் கட்சிகள்
தேர்தல் திருவிழா வந்துவிட்டாலே அரசியல் கட்சி நிர்வாகிகள் காட்டில் பணமழை அடைமழையாக பொழியும் என்பது ஊரறிந்தது. கிளைச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை பண மழையில் நனைவார்கள். பாவம் வேட்பாளர்கள் பாடு தான் திண்டாட்டமாக இருக்கும். சேமிப்புகள் அனைத்தையும் மொத்தமாக ஒரே மாதத்தில் கரைத்துவிடுவார்கள். இதில் வெற்றிபெற்று மீண்டுவிட்டவர்கள் பாடு பரவாயில்லை. தோல்வியுற்றவர்கள் கதையை சொல்லவே தேவையில்லை, அந்தளவிற்கு அவர்கள் நிலை மோசமாகிவிடும்.
திமுக; அதிமுக
தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுகவில் நிர்வாகிகளுக்கு பரிசளிக்கும் வழக்கம் ஏற்கனவே உள்ளது. டிவிஎஸ் எக்.எல். இருச்சக்கர வாகனம், எல்.இ.டி. தொலைக்காட்சி, ஒரு சவரன் தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, குண்டா என தேர்தல் நேரத்தில் பரிசுப் பொருட்கள் தரப்படும். நிர்வாகிகளின் தகுதிக்கேற்பவும், செயல்படும் திறனுக்கேற்பவும் இந்த பொருட்கள் கொடுக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்படும்.
முதல்முறையாக
இதனிடையே முதல்முறையாக தேசியக் கட்சியான பாஜகவிலும் நிர்வாகிகளுக்கு பரிசளிக்கப்படும் எனப் பேசி உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் எனக் கூறி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் முருகன்.
மக்களை ஈர்ப்பார்
எம்.ஜி.ஆரை போல் மக்களை ஈர்க்கும் சக்தியும் ஆற்றலும் பிரதமர் மோடிக்கு உள்ளதாகவும், தேர்தல் பணிகளை சுணக்கமின்றி மேற்கொண்டால் பாஜகவுக்கு வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகள் மத்தியில் கூறியுள்ளார் முருகன். மேலும், பாஜக கைகாட்டும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.