அரசியல் கத்துக்குட்டி.. மத்திய அரசுடன் இணக்கம் தேவை.. உதயநிதிக்கே பாடம் எடுத்த எல்.முருகன்
சென்னை: உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்றும் பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் எல். முருகன் கூறியுள்ளார்.
அப்பன் வீட்டு காசு என்று உதயநிதி சொன்ன வார்த்தை பல நாட்களாக ஊடக உலகத்தையும் சமூக வலைத்தளங்களையும் சுற்றி வருகிறது. உதயநிதிக்கு பாஜகவினர் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் மழை பாதிப்புக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசோ ரூ.450 கோடியை மட்டுமே வழங்கி இருக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர். மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?" என அமைச்சர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.
புயல் நிவாரணத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர், "அவர்கள் கேட்டதும் பணம் எடுத்துக் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?" என கூறினார். புயல் நிவாரண நிதி தொடர்பான மத்திய அமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம் என்று பதில் அளித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக எதிர்வினை ஆற்றினார். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, அவங்க பாஷையே அப்படித்தான் இருக்கும் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் எப்படி பேச வேண்டும் என்றும் கூறினார். அதற்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கொடுத்தார் உதயநிதி.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி கிடையாது. இவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எந்த இயற்கை பேரிடர் என்றாலும் சேவை மனபான்மையுடன் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதும் முன் நிற்கும். மத்திய அரசின் அனைத்து மீட்பு குழுக்களும் பேரிடரின் போது அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாக பேரிடர் ஆய்வு செய்ய வரும் மத்திய அரசு குழு ஒரு வாரத்திற்கு பிறகு தான் வருவார்கள், இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் எல்.முருகன்.












Click it and Unblock the Notifications