என்னையே நிறுத்துறீங்களா? காவல் அதிகாரியை கடுமையாக தாக்கிய வக்கீல்..சென்னையில் பரபரப்பு
சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டி தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசாரை வழக்கறிஞர் ஒருவர் என்னையே நிறுத்துறீங்களா என்று கூறி ஒருமையில் திட்டி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அந்த வக்கீல் சப் இன்ஸ்பெக்டரை முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் தற்போது விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலை விபத்துகளுக்கு போக்குவரத்து விதி மீறல்களே பிரதான காரணமாக இருப்பதாக இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன தணிக்கை
அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் இருப்பது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, சிக்னல் ஜம்பிங் செய்வது, லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இரவு நேரங்களில் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்னை எப்படி நீங்கள் நிறுத்தலாம்
அந்த வகையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் போர் நினைவுச்சின்னம் அருகே கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பெண் ஒருவருடன் வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடஷ் (வயது 27) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாராம். அவரை நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது பின்னால் பெண் இருக்கும் போது என்னை எப்படி நீங்கள் நிறுத்தலாம் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்
அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசாரை ஒருமையில் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறியதோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து வாக்கு வாதம் முற்றி சப் இன்ஸ்பெக்டரை அந்த வக்கீல் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரை சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

வழக்கறிஞர் கைது
தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரை தாக்கிய வழக்கறிஞரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வியாசர் பாடி நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷை கைது செய்த போலீசார், பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications