எங்களையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்வதா? சீற்றத்தில் இடதுசாரிகள்
சென்னை: திமுக கூட்டணியில் இடதுசாரிகள் கட்சிகளையும் சில இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமே என ஆலோசனை முன்வைக்கப்பட்டதால் கொந்தளித்து போயிருக்கிறார்களாம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்கிற நிலைதான் இருக்கிறது.
குறைவான தொகுதிகள்
ஆனால் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கறார் காட்டுவதில் ஏற்கனவே கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
வைகோவின் விரக்தி பேச்சு
திமுக கூட்டணியில் மிக குறைவான இடங்கள்தான் கிடைக்கும்; ஆகையால் பதவிகளுக்கு ஆசைப்படாதீர்கள். வேறுவழியே கிடையாது என்பதால் இதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பது வைகோவின் கருத்து.
கூட்டணிகளும் உதயசூரியனில்..
வைகோவின் இந்த கருத்தே திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஒவ்வொரு கூட்டணி கட்சியும் சில இடங்களிலாவது உதயசூரியன் சின்னத்தில் நின்றால் நல்லது; அப்படி உதயசூரியன் சின்னத்தை ஏற்றால் சில தொகுதிகள் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதும் திமுகவின் யோசனை.
இடதுசாரிகள் கோபம்
திமுகவின் இந்த யோசனை இடதுசாரிகளை மிகவும் கொந்தளிக்க வைத்துவிட்டதாம். திமுக தேர்தல் களத்துக்கு வருவதற்கு முன்பே முதலாவது பொதுத்தேர்தல் காலத்தில் இருந்து போட்டியிடுகிற எங்களையும் போய் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்வது எப்படி சரியாகும்? நாங்கள்தான் எப்படி ஏற்போம்? என கொந்தளிக்கின்றனராம் தோழர்கள்.