லியோ அதிகாலைக் காட்சிக்கு சிக்கலை தந்த அஜித் திரைப்படம்.. தமிழக அரசு சொன்ன பதில்
சென்னை: லியோ அதிகாலை காட்சிக்கு துணிவு திரைப்படம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. துணிவு திரைப்படத்தை அதிகாலையில் பார்க்க போய் ரசிகர் இறந்ததை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, அதிகாலை காட்சியை அனுமதிப்பதில் சட்டம் ஒழுங்கில் சிக்கல் ஏற்படும் என்று மறுத்துவிட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் காலை 4 மணி அல்லது ஐந்து மணிக்கே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே லியோ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை, அக். 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24 -ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் சமீபத்தில் அனுமதி வழங்கி இருந்தது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக மீண்டும் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 'லியோ' சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கண்காணிக்க வேண்டும் என்று உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் அனைத்து தியேட்டர்களிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க என்று உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா அறிவுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர முறையீடு செய்தனர். லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக ஒரு மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது லியோ திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதித்தால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு நாளில் 6 காட்சிகளை திரையிடும் அளவுக்கு நேரம் இருக்கிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா , ரசிகர்கள் காட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற மதுரை வழக்கு தொடர்பான ஆவணங்களை இங்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த்,லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது கூறினார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், இந்த படம் 2 மணிநேரம் 40 நிமிடம் என்று முன்பே தெரிந்திருந்தால், சிறப்பு காட்சிக்கே அனுமதி அளித்திருக்க மாட்டோம்.. வழக்கமான நான்கு காட்சிக்கு மட்டும் தான் அனுமதி அளித்திருப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிகாலை 4 மணி காட்சியில் ஒரு படம் (துணிவு) திரையிடப்பட்ட போது, அந்த படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதுதவிர லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான போது, ஒரு தியேட்டர் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டியதும்,ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதும் அரசின் கடமையாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு முடிவு எடுத்துள்ளபடி அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து நாட்களுமே ஒரு காட்சி திரையிட அனுமதிக்கிறோம்.. அந்த காட்சியை 9 மணி காட்சியாகத்தான் திரையிட வேண்டும். 7 மணி காட்சியாக திரையிட அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக படம் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அன்று ரசிகர் ஷோ என்று சொல்லக்கூடிய ஷோவிற்கு அனுமதிக்கவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்திலேயே மறுத்துவிட்டது.
லியோ தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடுகையில், தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது. பூஜை விடுமுறை நாட்கள் வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்கள் வருகிறது. அதன் அடிப்படையில் தான் கூடுதல் காட்சிக்கு அனுமதி கேட்கிறோம்.. லியோ திரைப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை.. திரையரங்குகளில் படத்தின் இடைவேளை 20 நிமிடங்கள் என்பதை குறைத்து வெளியிட தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திரையரங்குகளில் படத்தின் இடைவேளை 20 நிமிடங்கள் என்பதை குறைத்து வெளியிடலாம். இந்த விஷயத்தில் ரசிகர்கள் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும், படம் வெளியிடுவதே ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான்.. அதை ஏன் ரசிகர் ஷோ பொதுமக்கள் ஷோ என பிரித்து பார்க்கிறார்கள் என்று கேட்டார் நீதிபதி அனிதா சுமந்த். அப்போது நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. இதன் பின்னர் நீதிபதி தனது தீர்ப்பில், 19ம் தேதி கூடுதல் காட்சிவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். அதே சமயம் 9 மணி காட்சியை 7 மணி காட்சியாக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அரசை அணுக வேண்டும். அந்த கோரிக்கை குறித்து நாளை மதியத்திற்குள் அரசு முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
கடைசியாக வாரிசு துணிவு ஆகிய படங்களின் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு கடந்த பொங்கல் சமயத்தில் அனுமதி அளித்தது..அதன்பிறகு வந்த ஜெயிலர் உள்பட எந்த திரைப்படத்திற்கும் அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications