எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசை.. யாரை கேட்டாலும் 'நோ' வேக்சின்.. அதிவிரைவாக தீரும் தடுப்பூசி.. ஏன்
சென்னை: அஜித், விஜய் திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளுக்கே போட்டி கொடுக்கும் வகையில் மாநிலத்தில் மிகக் கடுமையாக வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. அனைத்து மையங்களில் மிக விரைவாக வேக்சின்கள் காலியாவதால் அதிகாலையில் இருந்து வரிசையில் நிற்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. உருமாறிய கொரோனா மற்றும் மக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதே கொரோனா 2ஆம் அலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

கொரோனா பாதிப்பு
கொரோனா உச்சத்தில் இருந்த போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 15% மேல் வரை சென்றது. ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து நேற்று ஐந்தாயிரத்திற்கும் கீழ் சென்றது. வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது.

வேக்சின் பணிகள்
தற்போது பாதிப்புகள் குறைவாக உள்ளதால் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வேக்சின் போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக மக்கள் மத்தியிலிருந்த அச்சமும் தற்போது விலகியுள்ளது. கொரோனாவில் இருந்து தடுப்பூசி மட்டுமே காக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால் மாநிலம் முழுவதும் பலரும் வேக்சின் போட்டுக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

வோக்சின் தட்டுப்பாடு
ஆனால், நாட்டின் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் பல மையங்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் நிற்கின்றனர். இருப்பினும், ஒவ்வொரு மையத்திலும் 100 முதல் 250 வரை மட்டுமே வேக்சின்கள் போடப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

வேக்சின் கிடைப்பதில்லை
சில மாவட்டங்களில் அதிகாலை 2 மணி முதலேகூட தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நிற்கத் தொடங்குகின்றனர். ஆனாலும் அனைவருக்கும் வேக்சின்கள் கிடைப்பதில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசிகள் கிடைக்காமல் போவதால் சில இடங்களில் சுகாதார ஊழியர்களுக்கும் மக்களுக்கும் மோதல்களும் ஏற்படுகிறது. சில தடுப்பூசி மையங்களில் முந்தைய நாள் இரவு, தங்கள் உடைமைகளைக் வைத்து வரிசையில் இடம் பிடிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது.

மக்கள் ஆர்வம்
மக்கள் மத்தியில் வேக்சின் செலுத்த ஆர்வம் அதிகரித்துள்ளதையே இது தெளிவாகக் காட்டுகிறது. இருந்தாலும் பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் வேக்சின் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடே வேக்சின் செலுத்த ஆர்வமாக இருக்கிறது என்றாலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் விரும்பும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

கொரோனா 2ஆம் டோஸ்
தடுப்பூசி பற்றாக்குறை என்பது சில வாரங்களாகவே இருப்பதால், முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களால் கூட சரியான நேரத்தில் 2ஆம் டோஸ் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 69 ஆயிரம் பேர் சரியான நேரத்தில் 2ஆம் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களுக்குக் கடந்த வாரம் சிறப்புத் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது.

வேக்சின் பணிகள் நிறுத்தம்
தடுப்பூசி பற்றாக்குறை அதிகரித்தால் சென்னையில் வேக்சின் போடும் பணிகள் நிறுத்தப்படுவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று அறிவித்தார். அதன் பின்னரே அவசர அவசரமாகச் சென்னைக்கு நேற்று மாலை 2 லட்சம் வேக்சின் டோஸ்கள் அனுப்பப்பட்டது. இருப்பினும், அது ஒரு நாளைக்குக் கூட போதாது என்றே சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
Recommended Video

எப்போது சரியாகும்
இந்தத் தட்டுப்பாடு வரும் மாதங்கள் படிப்படியாகச் சரியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதேபோல கோவாக்சின், கோவிஷீல்டு உற்பத்தியையும் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நாட்டில் நான்காவது தடுப்பூசியாக மாடர்னாவுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி
இவை மூலம் இன்னும் சில மாதங்களில் வேக்சின் பற்றாக்குறை முழுமையாகத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் இன்னும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் வேக்சின் போட்டு முடிக்க முடியும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications