கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு விதிமீறல்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.

மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976 மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில்தான் 45 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்திற்கு எதிராக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி, மூத்த பத்திரிக்கையாளர் ஏஎஸ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக, வரம்பு மீறி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல கேசவாநந்த பாரதி வழக்கை சுட்டிக்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 24 ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேசவாநந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
அதில், நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து முயன்றாலும், வாக்களித்தாலும் கூட அரசியலமைப்புச் சட்டங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாற்றம் செய்ய முடியாது என்று இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதை சுட்டிக்காட்டி கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications