மறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா!
தேமுதிகவில் 5 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது
சென்னை: திமுக, அதிமுக என உள்ளாட்சி தேர்தல் ரேஸில் கலந்து கலக்கி வருகிறது தேமுதிகவும்.. விருப்ப மனு ஒரு பக்கம்.. தொகுதி பங்கீடு பற்றி பேச குழு ஒரு பக்கம்.. என விறுவிறு வேலைகளில் இறங்கி விட்டது. ஆனால் திரும்பவும் சுதீஷ் கையில்தான் தேமுதிகவின் மொத்த பொறுப்பும் வசமாகி உள்ளது.
நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பரில் நடக்க போகிறது. இதற்காக அதிமுக, திமுக தரப்பில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இரு கட்சிகளுமே விருப்பமனு பெறும் வேலையில் இறங்கி வரும் நேரம், இதில் தேமுதிகவும் இணைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று அக்கட்சி சார்பாக நடத்தப்பட்ட தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீர்ப்பில் நாரிமன் 'நச்'
5 பேர் கொண்ட குழு
இதையடுத்து, தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. கட்சி தலைவர் விஜய்காந்த்தான் விருப்ப மனுக்களை வழங்கினார். அதேபோல, உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த குழுவிற்கு எல்கே சுதீஷ்தான் தலைமை.. இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோர்தான் சுதீஷ் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சுதீஷ்
ஏற்கனவே இதற்கு முந்தைய எம்பி தேர்தலிலும் சுதீஷ்தான் தொகுதி பங்கீடுகளில் தலையிட்டு பேசியதாக சொல்லப்பட்டது. எனினும், கடைசி வரை இழுபறியே நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில், ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாககூட அன்று செய்திகள் பரபரத்தன.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமே, தேமுதிக வாலை சுருட்டி கொண்டது.. அதற்கு பிறகு அதிமுகவிடம் டிமாண்ட் செய்ய திராணியற்று, அக்கட்சி தருவதை வாங்கி கொள்ளும் நிலைமைக்கும் ஆளானது... அப்படி கிடைத்த சீட்டில் தோற்றும் போனது.. அதாவது, பல வருடம் கஷ்டப்பட்டு, விஜயகாந்த் சம்பாதித்த நல்ல பெயரை, ஒரே நாளில் அங்கும், இங்கும் பேச்சுவார்த்தை நடத்தி நாறடித்துவிட்டார் சுதீஷ்.
சலசலப்பு
இந்த முறையும் அவர் தலைமையில்தான் சீட் பஞ்சாயத்து நடக்க போகிறது. மீண்டும் சுதீஷையே தேர்தல் குழுவுக்கு தலைமையாக கட்சி நியமித்துள்ளது. இதனால் ஒருசில நிர்வாகிகளுக்கு இந்த நியமனம் அதிருப்தியை தந்துள்ளதாகவும் சலசலப்பு எழுந்து வருகிறது.
விஜயகாந்த்
எனினும், இம்முறை அவர் பொறுப்பாக செயல்படுவாரா? சரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா? அதற்கு முன்னதாக கட்சியை அவர் பலப்படுத்தி வைத்திருக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எனினும் கட்சியை முன்னின்று கொண்டு செல்ல முடியாத நிலையில் விஜயகாந்த் உள்ளதாலும், நீண்டகாலமாகவே தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் சுதீஷ் உள்ளதால், நெளிவு சுளிவுகளை அவர் நன்கு அறிந்து வைத்திருப்பதால்தான், இக் குழுவிற்கு தலைமை பொறுப்பு தரப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
கடும் போட்டி
இப்போது, வேலூர், சேலம் மேயர் பதவிகளுக்கு அதிமுக கூட்டணிக்குள் கடுமையான போட்டி உள்ளதால், சுதீஷ் தலைமையிலான குழு எந்த மாநகராட்சியை கேட்டு பெறபோகிறது என்பது பெரும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது. எப்படியோ.. விஜயகாந்த் பெயரை மேலும் டேமேஜாக்காமல் இருந்தால் சரி