உடனே ரூ.1000 கோடி தேவை.. மருத்துவ உபகரணங்கள் வாங்கணும்.. பிரதமருக்கு தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை
சென்னை: சென்னை: மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனே தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்... தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை ஒதுக்கவும் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவை பீடித்திருக்கும் கொரோனாவைரஸை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது வீடியோ கான்பரஸ்மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொற்று பாதிப்பு, எண்ணிக்கை, செயல்பாடுகள், திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தொடர்பாகவும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை
சில தினங்களாகவே, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளது.. அதனால் சில மாநிலங்களில் நாடு முழுவதுமே லாக்டவுன் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.. அப்படி இல்லையென்றால், தங்களுக்கு மட்டுமாவது, விமான, ரயில் சேவையை அனுமதிக்ககூடாது என்று சில மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

முதல்வர்கள்
தற்போது மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில், மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் இன்று மீண்டும் வீடியோ கான்பரஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஆலோசனை
இக்கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும்படி மாநில முதல்வர்கள் கோரியதாக தெரிகிறது. வைரஸ் தடுப்புப் பணிகளில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எந்த மாதிரியான பலன்களை அளித்துள்ளன என்பது பற்றியும், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்... அதேசமயம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நிதி தொகுப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் விவகாரம் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக நிலவரம் குறித்து முதல்வர் பேசும்போது, நிதித்தொகுப்பு பற்றிதான் கோரிக்கை வைத்துள்ளார்.. மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனே தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை ஒதுக்கவும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

எதிர்பார்ப்பு
மேலும், "தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது... சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாத அவகாசம் அளிக்க வேண்டும்... பிசிஆர் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். மாநில நிலவரங்களை முதல்வர்கள் மூலம் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, ஊரடங்கு தொடர்பாக இன்று அல்லது நாளை நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!!












Click it and Unblock the Notifications