"தள்ளி போங்க.. யாரும் கிட்ட வராதீங்க!" கடைசி நேரத்தில் கத்திய ரயில் ஓட்டுநர்.. திக் திக் நொடிகள்
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கியமானது மின்சார ரயில். தினசரி இந்த ரயிலைப் பல லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்திற்குள்ளாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடற்கரை ரயில் நிலையம்
வார நாட்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என்று ரயில்கள் இயக்கப்படும் நிலையில், விடுமுறை நாளான இன்று குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி சென்னை ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அது கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்ல வேண்டியது.

விபத்து
இருப்பினும், அந்த ரயில் கடற்கரை ரயில் நிலையம் அருகே வந்த போது அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ரயில் நிலைய நடைமேடையின் மீது மோதிய மின்சார ரயில் அதில் ஏறி, அங்கிருந்த கடையின் சுவரின் மீது மோதியுள்ளது. பயங்கர சத்தத்துடன் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஒட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயம் இல்லை
பொதுவாக வார நாட்களில் கடற்கரை ரயில் நிலையத்தில் எப்போதுமே கூட்டம் இருக்கும். ஆனால், இன்று விடுமுறை தினம் என்பதால் நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லை. இதனால் யாருக்கும் விபத்து ஏற்பட்டும் கூட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. வார நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் நிச்சயம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றே விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

என்ன காரணம்
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை சரியாகத் தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பணிமனையில் இருந்து வந்த ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஓட்டுநர் கவனக்குறைவாக இருந்து இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

நடந்தது என்ன
இந்தச் சூழலில் விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், "ரயில் நிலையம் அருகே ரயில் சற்று வேகமாக வந்தது. அப்போது ரயிலில் இருந்த ஓட்டுநர் நகர்ந்து போகும்படி கத்தி நடைமேடை அருகே இருந்தவர்களை எச்சரித்தார். அதன் பின்னரே, அவர் ரயிலில் இருந்து அவர் குதித்தார்" என்றனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்துள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக உடனே அழைத்துச்செல்லப்பட்டார். மேலும், இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications