அன்று ஜெயலலிதாவிடம் "நெருங்கி வந்த" சிம்லா முத்துச்சோழன்! நெல்லை திமுக கூட்டணியை திணறடிப்பாரா?
சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதில் நெல்லை தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவிலிருந்து விலகி அண்மையில்தான் அதிமுகவில் இணைந்தவர். இவருக்கு தற்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகள் குறைவு என்பதால் அதிமுக நிறைய இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 20 இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் நேற்று தேமுதிக கூட்டணி முடிவான நிலையில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது.
இதையடுத்து இன்றைய தினம் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி பட்டியலாக அதிமுக அறிவித்தது. அதில் நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் அதிமுகவில் இணைந்தார்.
யார் இந்த சிம்லா முத்துச்சோழன்: திமுகவின் துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன் (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.
இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்ச் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா புனித அந்தோணியார் என்ற படத்தை தயாரித்தவர். இதன் மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர். முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் சிம்லா படித்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
பாரம்பரிய திமுககாரர்: அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர். கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் சிம்லா பணியாற்றி வந்தார். முதலில் வடசென்னை மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்திருந்தார். அப்போது 2016 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா களமிறக்கப்பட்டார்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்: அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். பொதுவாக ஜெயலலிதா போட்டியிடும் தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சிம்லா முத்துச்சோழன் களப்பணியாற்றியதால் அவர் 30 ஆயிரம் வாக்குகளில் மட்டுமே வென்றார். இதனால் தமிழகம் முழுவதும் சிம்லா அறியப்பட்டார்.
ஏமாற்றமடைந்த சிம்லா: மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து வழக்கறிஞராக இருந்த மருது கணேஷுக்கு திமுக வாய்ப்பளித்தது. ஆனால் அந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையான டிடிவி தினகரனிடம் டெபாசிட்டை இழந்தார். இதையடுத்து சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications