தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வந்ததையும், தேர்தல் தேதியையும் கனெக்ஷன் செய்ய கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை கண்களில் அச்சம் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் கடந்த முறையை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டமாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் உள்ளன.
முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றாலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதிதான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி ஏன் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்தார் என்பது இப்போது புரிகிறது.
தேர்தல் தேதியை முடிவு செய்வது தேர்தல் ஆணையமா? பிரதமர் மோடியா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது என்று சொன்னார் செல்வப்பெருந்தகை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுவது மகிழ்ச்சி. நாட்டிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது.
எதற்கெடுத்தாலும் செல்லப்பெருந்தகை குற்றம் சொல்லக்கூடாது. பிரதமர் வந்ததனால் தேர்தலை முதற்கட்டமாக வைக்கவில்லை என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உள்ளது செல்வப்பெருந்தகை பேசுவது. திமுக காங்கிரஸ் கட்சி
கூட்டணி பலமாக இருந்தால் ஏன் அச்சப்பட வேண்டும். பிரதமர் வருகையை ஏன் விமர்சனம் செய்யவேண்டும். தமிழ்நாடு அவர்கள் கையை விட்டுப் போய் விட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. செல்வப்பெருந்தகை கண்களில் அச்சம் தெரிகிறது. அழிவை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications