திமுக கூட்டணியில் விசிக.. லோக்சபா தேர்தலில் 4 தொகுதியில் போட்டி? கேட்டது கிடைக்குமா?
சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 4 தொகுதிகளில் போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்து வருகிறது.

காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இந்த தேர்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது.
இந்த முறை, விசிக, கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் திருச்சியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வரவழைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களது பலத்தைக் காட்டியுள்ள விசிக, இந்த முறை 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், லோக்சபா தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் 3 தனித்தொகுதிகளிலும் 1 பொதுத்தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் எல்லா கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார் திருமாவளவன். இப்போதுதான் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. எங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும் என்று கூறினார் தொல். திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கேட்டது கிடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications