அதிமுகவை விட ரேஸில் முந்துகிறதே.. பாஜக கூட்டணியில் ஜிகே வாசனை தொடர்ந்து இணையும் ஜான் பாண்டியன்?
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடர்ந்து 2-வது கட்சியாக ஜான் பாண்டியனின் தமமுக இணைகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம்) , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (நாமக்கல்) ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இடதுசாரிகள், மதிமுக, காங்கிரஸ், விசிகவுடன் திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக 7 லோக்சபா தொகுதி பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படலாம். ஆனால் பாமகவோ 9 தொகுதிகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 3 முதல் 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கக் கூடும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல் கட்சியாக ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. முன்னதாக ஜிகே வாசனை தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்துப் பேசினார். இன்று காலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஜிகே வாசனை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய இருக்கிறது. இன்றே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் கூட்டணியை உருவாக்குவதில் அதிமுகவைவிட பாஜக வேகமாக இருக்கிறது. பிரதமர் மோடி நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றுவதற்காகவே அடுத்தடுத்த கட்சிகளை பாஜக கூட்டணியில் இணைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications