பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த ஓட்டு சதவீதம் சாதாரண விஷயம் இல்லை.. சொல்வது பிரசாந்த் கிஷோர்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்து திமுகவில் உள்ள தனது நண்பர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறியதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அதிமுக சென்ற பிறகு சந்தித்த முதல் தேர்தல் இதுதான்.

ஆகவே, அவர் இன்னும் திறமையாக வியூகம் வகுத்துச் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி வியூகம் வகுப்பதில் எடப்பாடி பழனிசாமி சறுக்கிவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி உட்படப் பல வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
மேலும் வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில்கூட எடப்பாடி பழனிசாமியால் வலுவாகக் கூட்டணியை அமைக்க முடியாது என்றும் சில கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன.
அதிமுக இந்த மக்களவைத் தேர்தலில் 20.46% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 34 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களம் இறங்கிய இந்தக் கட்சி, இன்னும் கூடுதலான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஒப்பிடுகையில் திமுக 22 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. அது 26.93% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அந்தக் கட்சிக்குக் கூட்டணி பலம் இருந்தது. அதிமுக கூட்டணியில் அப்படி ஒரு பலம் இல்லை.
இந்தத் தேர்தல் களத்தில் திமுக கடுமையாக மோடி எதிர்ப்பை முன்வைத்தது. அதிமுக பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டாலும், மோடி எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கவில்லை.
பாஜகவின் தோழமை கட்சி அதிமுக. எதிர்க்கட்சி திமுக. ஆனால், பாஜக தேசிய தலைவர்கள் இந்தத் தேர்தலில் திமுகவை டார்கெட் செய்ததைவிட, அதிமுக வாக்கு வங்கியைத்தான் டார்கெட் செய்து வேலை பார்த்தார்கள்.
குறிப்பாகப் பிரதமர் மோடி, ஜெயலலிதா தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்தார் என்றார். எம்ஜிஆரைப் புகழ்ந்து பேசினார். அதிமுகவின் வாக்குகளைக் குறிவைத்து இழுக்க பாஜக முயற்சி செய்வதாகப் பலரும் அப்போது கூறினர்.
தங்களது கட்சியின் தலைவர்களின் பெயரைச் சொல்லி வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக தங்கள் கட்சியின் தலைவர்களின் பெயரைச் சொல்லி பாஜக ஓட்டு கேட்கிறது என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் உட்படப் பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தனது வளர்ச்சிக்காக பாஜக அதிமுகவைக் கபளீகரம் செய்யலாம் என்று அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திமுகவில் உள்ள தனது நண்பர்களிடம் இந்தக் கருத்தைத்தான் நான் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன் என்று அவர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
தென்னிந்தியாவில் பாஜக வளர்வதாக நீங்கள் சொல்லி இருந்தீர்களே? என்ற கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த பிரசாந்த் கிஷோர், "நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்கு வாக்கு சதவீதத்தைப் பெறும் என்று கூறியிருந்தேன். அதைப் போலவே இந்தத் தேர்தலில் 11% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. இதைப் போலவே பாஜக தெலங்கானாவில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஆந்திராவையும் தெலங்கானாவையும் சேர்த்துக் கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட 13 எம்பிகளை இந்த முறை பாஜக பெற்றுள்ளது. அப்படியே அதில் ஒடிசாவையும் சேர்த்துப் பாருங்கள். பாஜக தென்னிந்தியாவில் வளர்ந்துள்ளது தெரியவரும். இந்தக் கட்சி ஆந்திரா மற்றும் ஒடிசாவில் வளரவில்லை என்றால், இந்த முறை அவர்கள் 220 சீட்டுக்குக் கீழாகக் குறைந்திருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் திராவிடக் கட்சிகள் இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக வளர முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு கிஷோர், "இது உடனடியாக நடக்காது. இது ஒரு நீண்டகால திட்டம். தமிழ்நாட்டைப் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் பாஜகவுக்கு 11% வாக்குகள் கிடைத்துள்ளதே மிகப்பெரிய விசயம்தான்.
தெலங்கானாவில் அவர்கள் 14% வாக்குகளைப் பெற்றதும் பலன் கிடைத்திருக்கிறது. ஒருவேளை தமிழ்நாட்டில் வேறு சில பிரச்சினைகள் இருக்கலாம். அதிமுகவுக்கு பி.ஆர்.எஸ். கட்சிக்கு ஏற்பட்ட நிலை உண்டாகலாம். இது ஈசியாக நடக்கும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், இதனுடன் மேலும் சில விஷயங்கள் சேர்ந்து நடக்கலாம்.
அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக எடுத்துக் கொள்ளலாம். அவர்களும் அதை விரும்பலாம். பாஜகவை எதிர்ப்பவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
பாஜகவுக்கு 11% வாக்குகள் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பது சாதாரணமான விசயம் இல்லை. இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். புறந்தள்ளிவிடக் கூடாது. இந்த விசயத்தைத்தான் நான் திமுகவில் உள்ள எனது நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications