ராஜ்பவனை விட்டு மீண்டும் கமலாலயம் வந்துள்ளேன்.. பாஜகவில் இணைந்த தமிழிசை செளந்தரராஜன் மகிழ்ச்சி
சென்னை: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ராஜ்பவனை விட்டு விட்டு மீண்டும் கமலாலயத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன். அதிகாரத்தை விட்டு விட்டு மக்கள் பணியாற்றுவதற்காக மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, புதுச்சேரியில் ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாநிலத்தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை செளந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார் அண்ணாமலை. மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய பழைய உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் பணியாற்றுவதற்காகவே அதிகார பதவியை விட்டு விட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். ராஜ்பவனை விட்டு விட்டு கமலாலயம் வந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.

ஆளுநர் பதவி ராஜினாமா என்னும் கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications