மு.க ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? - கொளுத்திப் போடும் பரூக் அப்துல்லா
முதல்வர் மு.க ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்து வெற்றிக்கு பின்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்றும் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து 2014, 2019ஆம் ஆண்டுகளில் அபரிமிதமான வெற்றியை பெற்றது பாஜக. தேசிய கட்சியான பாஜக இப்போது 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க வலிமையுடன் தயாராகி வருகிறது.

பாஜகவை எதிர்க்க வலிமையான எதிர்கட்சி என்பது இதுவரை உருவாகவில்லை. பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையை ஏற்க பல மாநில கட்சிகள் தயாராக இல்லை.
ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்றும் அதற்கான பலன் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. எனவே பாஜகவை வீழ்த்த வலிமையான தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று களைகட்டியுள்ளது. தேசிய தலைவர்கள் பலரும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்றும் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தப்பின் பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம் எனவும் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இதனை எந்த அளவிற்கு ரசிக்கும் என்று கூற முடியாது. காரணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு விழா மேடையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின். அதனையே மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பெரிதாக ரசிக்கவில்லை. இந்த நிலையில் மு.க ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சை தொடக்கி வைத்துள்ளார் பரூக் அப்துல்லா. இன்றைய விழா மேடையில் இது குறித்து பரபரப்பாக பேசப்படுமா என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications