நீட் ரத்து.. கட்டாய வேலைவாய்ப்பு.. விவசாய கடன் ரத்து.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை!
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மத்தியில் மதசார்பற்ற அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். மதவெறிபிடித்த அரசை நீக்க வேண்டும். ஆனால் சுயாட்சியை காக்க வேண்டும், என்று அறிக்கையை வெளியிட்டு பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகள் உள்ளது.
- வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். வேலை கிடைக்கும் வரை நிவாரணம் வழங்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- பெரிய நிறுவனங்களின் நேர்முக வரியை அதிகப்படுத்த வேண்டும்.
- தேச உற்பத்தியில் 6% கல்விக்கு அளிக்க வேண்டும்.
- மருத்துவத்திற்கு 5% உற்பத்தியை அளிக்க வேண்டும்.
- விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எல் சுவாமிநாதன் கமிஷனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
- ஜிஎஸ்டியில் மொத்தமாக மாற்றம் கொண்டு வர வேண்டும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் .
- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18,000 ரூபாய் அளிக்க வேண்டும்.
- அனைத்து மக்களுக்கு வீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- நீதிமன்றம் , நிர்வாகம், மத்திய அரசு அலுவலகங்களில் அவர்களின் தாய் மொழியே இருக்க வேண்டும்.
- கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வை தொடர்ந்து செய்ய வேண்டும்.
- ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளை உடனடியாக மூடுவது.
- தமிழகத்தின் நதி நீர் உரிமையை பெறுவதற்கு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் இதில் இடம்பெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications