Asani: வங்கக் கடலில் உருவானது அசானி புயல்.. தமிழகம், புதுவைக்கு இடி மின்னலுடன் கூடிய மழை!
சென்னை: வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அசானி புயலாக வலுப்பெற்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை வானிலை ஆய்வு மைய இன்று வெளியிட்ட செய்திக்குறிப்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது 8-ம் தேதி (இன்று) காலை புயலாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகர்ந்து 10-ம் தேதி மாலை வட ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும்.
அதன் பிறகு வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன்காரணமாக, தென்கிழக்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மெல்ல கற்றின் வேகம் அதிகரித்து இன்று மாலை 110 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
ஆகவே மீனவர்கள் வங்கக்கடலில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. மழைப்பொழிவை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஆங்காங்கே இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் வடக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.